பெட்ரோல், டீசல் வரியை மாநிலங்கள் குறைக்கனும்னு பிரதமர் மோடி கேட்க வெட்கப்படனும்.. கேசிஆர் அட்டாக்
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மாநில அரசுகளை பலிகடாக்களாக்கும் பிரதமர் மோடியின் கருத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென பிரதமர் மோடி, கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநிலங்கள் வாட் வரியை குறைக்க கோரிக்க வைத்தோம். ஆனால் தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை. அதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே உடனடியாக வாட் வரியைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறிவைத்து பிரதமர் மோடி விமர்சித்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

வெட்கப்படுங்க மிஸ்டர் மோடி
இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது: மாநிலங்கள் வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்காக அவர்தான் வெட்கப்பட வேண்டும். மாநில அரசுகள் வரிகளை குறைக்க வேண்டும் என்று சொல்கிற மத்திய அரசு ஏன் தன்னுடைய வரிகளை குறைக்கவில்லை? உங்களுக்கு திராணி இருந்தால் இதற்கு விளக்கம் தாருங்கள்.. பிரதமர் மோடி நடத்தியது கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம். அது ஒருநாடகம். கூட்டத்தின் நோக்கத்தை விட்டுவிட்டு பிரதமர் மோடி பேசினார். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.

மமதா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியதாவது: கொரோனா தடுப்பு தொடர்பான வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி ஒருதலைபட்சமாக, தவறாக பேசியுள்ளார். பிரதமர் மோடி முன்வைத்த தகவல்கள் அனைத்தும் தவறானவை. கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கும் ரூ1 மானியம் வழங்கி இருக்கிறோம். இந்த அடிப்படையில் மேற்கு வங்க மாநில அரசு ரூ1,500 கோடி செலவிட்டுள்ளது. மத்திய அரசு, மேற்கு வங்க மாநிலத்துக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ97,000 கோடி. இதில் பாதி தொகையைத்தான் பெற்றிருக்கிறோம். இந்த தொகை கிடைத்த உடனேயே ரூ3,000 கோடி பெட்ரோல், டீசல் மானியமாக கொடுக்கிறோம். மானியம் வழங்குவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அரசாங்கத்தை எப்படி நாங்கள் நடத்துவது? இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.

மத்திய அரசு பாரபட்சம்
மேலும் பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. உ.பி, குஜராத் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மானியம் வழங்கப்படுவதை பெருமையாக குறிப்பிடுகிறார் மோடி. உண்மையில் மத்திய அரசிடம் இருந்து அளவுக்கு அதிகமான நிதியை அந்த மாநில அரசுகள் பெறுகின்றன. ஆனால் மேற்கு வங்கத்துக்கு மிக குறைவான நிதியே வழங்குகிறது மத்திய அரசு. இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார். மேலும் தமது ட்விட்டரில் பக்கத்திலும் உயர்ந்துவரும் அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஜனநாயகத்தை புல்டோசர் கொண்டு இடித்து தள்ள வேண்டாம் என கூறியுள்ளார் மமதா.

உத்தவ் தாக்கரே சீற்றம்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில், மும்பையில் 1 லிட்டர் டீசல் மீதான மாநில வரி என்பது ரூ22.37. ஆனால் மத்திய அரசின் டீசல் வரி ரூ.24.38.அதாவது மத்திய அரசின் வரிதான் மிக அதிகம். பெட்ரோல் மீதான மாநில வரி ரூ32.55. பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ31.58. மகாராஷ்டிராவில் ஏற்கனவே இயற்கை எரிவாயு மீதான வாட் வரி 13.5%-ல் இருந்து 3% குறைக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளுக்கு மாநில அரசுகளே காரணம் என்பது ஏற்புடையது அல்ல என்றார்.












Click it and Unblock the Notifications