சும்மா இல்லாத சீனா! லடாக்கில் புதிய மாவட்டங்கள் அறிவிப்பு! இந்தியா கடும் எதிர்ப்பு
டெல்லி: சீனாவின் வடமேற்கு பகுதியில் புதியதாக 2 மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இது லடாக்கில் செய்யப்படும் அத்துமீறல் என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
எப்போ பார்த்தாலும் இந்தியாவுடன் ஏதாவது ஒரு பஞ்சாயத்தை சீனா செய்துக்கொண்டே இருக்கிறது. கடந்த முறை அருணாச்சலப் பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தியிருந்த சீனா, இந்த முறை லடாக்கில் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது. அதாவது வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் புதியதாக இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. அறிவிப்பில் பிரச்னையில்லை, ஆனால் லடாக்கில் இந்தியா கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதில்தான் பிரச்சனை.

கடந்த டிச.27ம் தேதியன்று, இந்த அறிவிப்பை சீன அரசு ஊடகமான Xinhua வெளியிட்டிருந்தது. புதிய மாவட்டங்களுக்கு He'an County மற்றும் Hekang County என பெயிரிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மற்றும் அந்நாட்டின் மாநில கவுன்சில் ஒப்புதலுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா எதிர்ப்பு: சீனாவின் இந்த அறிவிப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். "சீனாவின் அறிவிப்பை நாங்கள் பார்த்தோம். அவர்கள் அறிவித்துள்ள புதிய மாவட்டங்கள் லடாக்கில், இந்திய கட்டுப்பாட்டு பகுதிக்குள் வருகிறது. இது சட்ட விரோத ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தூதரகம் வழியாக நாங்கள் எங்கள் எதிர்ப்பை சீனாவுக்கு தெரிவித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
பிரம்மபுத்திரா அணை: அதேபோல பிரம்மபுத்திரா அணை குறித்தும் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள யர்லுங் சாங்போ ஆற்றில் சீனா மிகப்பெரிய அணை ஒன்றை கட்டுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. நீர் மின் திட்டத்திற்காக இந்த அணை கட்டப்படுவதாகவும் சொல்லப்பட்டது. இந்த ஆறு இந்தியாவுக்கு மிகுந்த பலனை கொடுக்கிறது. எனவே அணை கட்டுவது குறித்து இந்தியாவிடம் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
ஒருவேளை சீனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பின், இந்தியா தனது நலனை காப்பாற்றிக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஓங்கும் சீனாவின் கை: சமீப காலமாக சர்வதேச அளவில் சீனாவின் கை பெரிய அளவில் ஓங்கி வருகிறது. குறிப்பாக எல்லைகளை பலப்படுத்துதல், விரிவாக்குதல், இலங்கை மற்றும் மாலத்தீவுடன் நெருக்கம். பாகிஸ்தானுக்கு 5ம் தலைமுறை போர் விமானங்களை வழங்குவதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தல் என சீனாவின் செயல்கள் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் சீனா தனது ராணுவத்தை முன்னெப்போதை விடவும் தற்போது பலப்படுத்தியிருக்கிறது.
இந்தியா பதிலடி: இந்தியாவை பொறுத்தவரை, சீனா எப்போதும் கண்காணிப்பு வளையத்திற்குள்தான் இருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்திலும், கால்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இப்படி இருக்கையில் லடாக் விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவையான நேரத்தில் இந்தியாவின் பதிலடி தரமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனா எவ்வளவு தூரம்தான் ஆட்டம் காட்டுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போமே!












Click it and Unblock the Notifications