ரயில்வே டீ கப்பிலும் புகுந்து புறப்பட்ட சவுகிதார்!
டெல்லி: நானும் சவுகிதார் கோஷம் நாடெங்கும், பாஜகவினர் மத்தியிலும், வலைதளங்களிலும் பரவிக் கிடக்கும் இந்த சூழலில் ரயில்களில் வழங்கப்படும் பேப்பர் 'கப்' களில் நானும் சவுகிதார் என்ற ஸ்லோகன் அச்சடிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் ரயில்வே நிர்வாகம் அதை திரும்ப பெற்றுக் கொண்டது.
எங்கள் நாட்டின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று ராகுல்காந்தி மோடியை குறிப்பிட்டு கூறியதால், மோடி தான் மட்டுமல்ல இந்த நாட்டு மக்கள் அனைவருமே காவலர்கள் என்று கூறினார். அதோடு தனது டிவிட்டர் கணக்கின் பெயரையும் சவுகிதார் நரேந்திர மோடி என்று மாற்றிக் கொண்டார். அதன் பிறகு பெரும்பாலான பாஜகவினர் தங்களது பெயருக்கு முன்னாள் சவுகிதார் என்று அடைமொழி இட்டு வருகின்றனர்.

இந்த சவுகிதார் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் சூழலில் ரயில்வேயில் வழங்கப்பட்ட பேப்பர் கப்பில் இந்த வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. புது டெல்லியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலம் காத்கோடம் நகருக்கு சென்ற காத்கோடம் சதாப்தி எக்ஸ்பிரசில் இந்த பேப்பர் கப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் மிஷன் சக்தி குறித்த மோடியின் பேச்சு விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் மிஷன் சக்தி குறித்த பிரதமரின் உரைக்கு எங்களிடம் அனுமதி பெறவில்லை என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் ரயிலிலும் நானும் சவுகிதார் என்ற விளம்பரம் அச்சடிக்கப்பட்ட பேப்பர் கப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
சதாப்தி ரயிலில் தேநீர் வழங்க பயன்படுத்தப்பட்ட இந்த பேப்பர் கப்பை புகைப்படம் எடுத்த பயணிகள் இதை ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். உடனடியாக விசாரணையில் இறங்கிய ரயில்வே அதிகாரிகள் இந்த கப்புகளை வழங்கியது யார் என்று கண்டுபிடித்தனர். சங்கல்ப் என்ற அமைப்பு இந்த கோப்பைகளை ரயில்வே நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக செயல்பட்ட ரயில்வே அதிகாரிகள் இந்த கப்புகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம் இது தங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்றும் எந்த வித உள்நோக்கமும் இன்றி நடந்தது என்றும் தெரிவித்துள்ளது அதோடு இந்த பேப்பர் கப்புகளை சப்ளை செய்த ஒப்பந்த தாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications