உங்க ஊரில் உள்ள மருத்துவ மூலிகைகளை படம் எடுத்து அனுப்புங்க.. ரூ5,000 பரிசுத் தொகை வெல்லுங்க
டெல்லி: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சிலின்கீழ் செயல்படும் லக்னோவில் உள்ள மத்திய மருத்துவ மற்றும் நறுமண மூலிகைகள் நிறுவனம் தேசிய அளவில் மூலிகை புகைப்படப் போட்டியை அறிவித்துள்ளது.
இது தொடர்பான மத்திய அரசின் அறிக்கை: இந்தியா இயற்கை வளம் செறிந்த நாடாகும். இங்கு சுமார் 18,000 பூக்கும் தாவரங்கள் உள்ளன. இதில் 7000 க்கும் அதிகமான தாவரங்கள் மருத்துவப் பயன்பாடு கொண்டவை என்று இந்திய மருத்துவ முறைகளின் நூல்கள், ஆவணங்களிலும் நாட்டார் வழக்காறுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவத் தாவரங்கள் தகவல் தரவு தொகுப்பின்படி 7263 தாவரவியல் பெயர்கள் பட்டியிலப்பட்டுள்ளன. தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையில் மட்டுமே 2559 தாவரவியல் பெயர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்1840 மூலிகைத் தாவரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மூலிகை என்றவுடனேயே மலையும் காடும்தான் நமது நினைவுக்கு வரும். ஆனால் ஒரு கிராமத்தில் சுமார் 120 மூலிகைத் தாவரங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமான தகவலாகவே இருக்கும். கிராமத்தின் இந்த மூலிகைகள்தான் கிராம மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியதோடு நீண்ட ஆயுளையும் கொடுத்தன.
மூலிகைகளை அடையாளம் காணவும் அவற்றின் மருத்துவப் பயன்பாட்டை அறிந்து பயன்படுத்தவும் நம் முன்னோர்களுக்குத் தெரிந்து இருந்தது. ஆனால் இன்று கிராமத்தில் பலருக்கும் பத்து மூலிகைக்கு மேல் தெரிவதில்லை. வாழ்க்கை முறை மாற்றமும் உணவு மாற்றமும் நம்மை மூலிகைகளிடம் இருந்து அந்நியப்படுத்தி விட்டன.
இப்போது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் சூழல் நம்மை மீண்டும் பாரம்பரியமான முறைகள்மீது நமது பார்வையைத் திருப்பி உள்ளது. பாரம்பரியமான உணவும் பாரம்பரிய சித்த மருந்துகளும் கொரோனா எதிப்புக்கு உதவுவது இப்போது தெரிய வருகின்றது. இந்தச் சூழலில்தான் மத்திய மருத்துவ மற்றும் நறுமண மூலிகைகள் நிறுவனம் தேசிய அளவில் மூலிகை புகைப்படப் போட்டியை அறிவித்துள்ளது.
இந்தப் புகைப்படப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர்களும் தொழில்முறைப் புகைப்படக் கலைஞர்களும் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு இல்லை.
போட்டியின் மையக்கருத்து " உங்கள் மருத்துவ/நறுமண தாவரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்பதாகும்.
ஒருவர் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று புகைப்படங்களைப் போட்டிக்கு அனுப்பலாம்.
உள்நாட்டு மூலிகைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
புகைப்படத்துடன்
மூலிகையின் லத்தீன் பெயர்,
பிராந்திய மொழிப் பெயர்
மற்றும் அதன் மருத்துவ குணம் குறித்து 20-30 வார்த்தைகளில் விளக்கம் சேர்த்து அனுப்ப வேண்டும்.
ஒரிஜினல் டிஜிட்டல் இமேஜ் (ஜேபெக்/டிஃப்) மட்டுமே ஏற்கப்படும்.
ஒவ்வொரு புகைப்படமும் 3எம்பி அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும். புகைப்படத்தை [email protected] என்ற மெயிலுக்கு இது என்னால் எடுக்கப்பட்ட சொந்தப்படம் என்ற உறுதிமொழியுடன் அனுப்ப வேண்டும்.
போட்டிக்குப் படங்கள் அனுப்பக் கடைசி நாள் 30.6.2020 ஆகும்.
போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000 மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படுவதோடு தலா ரூ.1,000 வீதம் 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.
விருது பெறுபவரின் படங்களுக்கான காப்புரிமை படம் எடுத்தவருக்கே உரியதாகும்.
விருது பெற்ற புகைப்படங்களை நிறுவனம் விளக்கப் பிரசுரங்களிலும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளும்.












Click it and Unblock the Notifications