கடவுள் சொன்னதால் தலைமை நீதிபதியை தாக்கினாராம்! மன்னிப்பு கேட்க மறுத்து ஏதேதோ உளறிய டெல்லி வழக்கறிஞர்
டெல்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் செருப்பு வீசித் தாக்குதல் நடத்த முயன்றார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காக இதுபோல செய்தேன் என்பது குறித்துச் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் சில கருத்துகளைக் கூறியுள்ளார். தெய்வீகச் சக்தியால் தான் வழிநடத்தப்பட்டதாகவும் தனது செயலுக்கு ஒருபோதும் வருந்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நமது நாட்டின் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் மீது நேற்றைய தினம் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பு வீசித் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்தனர். பிரதமர் மோடியும் இது தொடர்பாகத் தலைமை நீதிபதி கவாயிடம் நேரடியாகப் பேசியிருந்தார்.

சர்ச்சை கருத்து
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி பார் கவுன்சிலில் இருந்து ராகேஷ் கிஷோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், தனது செயலை நினைத்து ஒருபோதும் தனக்கு வருத்தமில்லை என்று 72 வயதான வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறியுள்ளார். கடவுள் சொன்னதைக் கேட்டே இதுபோல செய்ததாக அவர் கூறியிருக்கிறார். மேலும், தனது செயலுக்கு வருத்தமில்லை என்ற அவர் மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக அவர் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நான் இதற்காகச் சிறைக்குச் செல்லவும் கூட தயாராக இருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை.. இந்நேரம் நான் சிறையில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால், நான் செய்த செயலால் என் குடும்பத்தினர் மிகவும் வருத்தமடைந்துள்ளனர். அவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றார்.
என்ன நடந்தது
இந்தச் சம்பவம் நேற்று திங்கள்கிழமை காலை 11.35 மணியளவில் நடந்தது. நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, கிஷோர் தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் உடனடியாக அவரை பிடித்து வெளியேற்றினர். வழக்கறிஞர் கிஷோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் எனக் கேட்டபோது, நீதிபதி கவாய், நடவடிக்கை வேண்டாம் எனக் கூறியுள்ளார். வெறுமன எச்சரிக்கை விடுத்து அனுப்பிவிடுமாறு கூறியுள்ளார்.
கடவுள் சொன்னதை கேட்டேன்
கிஷோர் அந்த ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல குழப்பமான கருத்துக்களைக் கூறியிருந்தார். தெய்வீகச் சக்தி தன்னை வழிநடத்தியதாக அவர் கூறினார். மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோவின் ஜாவாரி கோவிலில் தலை துண்டிக்கப்பட்ட விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான விசாரணையின்போது தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்களால் தான் கோபமடைந்ததாக கிஷோர் தெரிவித்தார்.
அந்த வழக்கை விசாரித்திருந்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இம்முடிவு தொல்லியல் துறைக்கு உட்பட்டது எனக் கூறி மனுவை ஏற்க மறுத்திருந்தது. அதைக் குறிப்பிட்ட கிஷோர், "அந்தத் தீர்ப்புக்குப் பிறகு எனக்குத் தூக்கம் வரவில்லை.. இப்படியொரு விஷயம் நடந்த பிறகு எப்படி சும்மா இருக்க முடியும் என்று ஒவ்வொரு நாளும் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. தலைமை நீதிபதி மேல் கோபம் கொண்டேன்" என்றார்.
டெல்லி பார் கவுன்சில்
அதேநேரம் கிஷோர் ஒரு குழப்பமான நபர் என்றே டெல்லி பார் கவுன்சில் வட்டாரங்கள் கூறுகின்றன.. அவர்கள் மேலும், "அவர் 2011 முதல் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் தற்காலிக உறுப்பினராக இருக்கிறார். ஆனால் எந்தவொரு வழக்கிலும் ஆஜராகி நாங்கள் பார்த்ததே இல்லை. நிரந்தர உறுப்பினராக ஆக, ஒருவர் இரண்டு தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு 20 வழக்குகளில் ஆஜராக வேண்டும். ஆனால், அவர் அதைக் கூட செய்யவில்லை" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications