டெல்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் கட்டுகட்டாக பணம்.. விசாரணையை நேரடியாக கண்காணிக்கும் தலைமை நீதிபதி
டெல்லி: கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. அதைத் தீயணைப்பு வீரர்கள் அணைத்தபோது உள்ளே சாக்குப்பைகளில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த விவகாரம் இப்போது அடுத்தகட்ட விசாரணைக்குள் நுழைந்துள்ளது.
டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வர்மா. இவர் கடந்த 4 ஆண்டுகளாகவே டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் கடந்த 14ம் தேதி திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு அதிகாரிகள், தீயை அணைத்துள்ளனர்.

சாக்குப்பையில் பணம்
அப்போது வீட்டில் ஒரு அறையில் சாக்குப்பையில் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்த போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லையாம். அவரது மகள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட நீதிபதி அலகாபாத் ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மொத்தம் நான்கு முதல் 5 சாக்குப்பைகளில் எரிந்த நிலையில் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விசாரணை நடைமுறை இப்போது முக்கியமான இரண்டாவது கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த விசாரணையில் தெரிய வரும் விஷயங்களைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.
விசாரணைக் குழு
தலைமை நீதிபதி அமைத்துள்ள இந்த குழுவில் நீதிபதிகள் ஷீல் நாகு (பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி), ஜி.எஸ். சந்தவாலியா (இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி) மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் உள்ளனர். அதேநேரம் இந்த விசாரணையை முடிக்கக் காலக்கெடு எதுவும் தற்போது வரை நிர்ணயிக்கப்படவில்லை.
முதற்கட்ட விசாரணை
அதாவது முதலில் முதற்கட்ட விசாரணை நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.. அது முடிந்த பிறகே இப்போது விசாரணை 2ம் கட்டத்தில் நுழைந்துள்ளது. இதுதான் மிக முக்கியமான விசாரணையாகும். இதில் கண்டறியும் விஷயங்களைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த இரண்டாம் கட்டத்தைத் தலைமை நீதிபதியே நேரடியாகக் கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது.
2ம் கட்ட விசாரணை
முதற்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட ஐகோர்ட் நீதிபதி தனது அறிக்கையைத் தருவார். அதைத் தலைமை நீதிபதி ஆமோதித்து, தீவிர விசாரணை தேவை என்று உணர்ந்தால் மட்டுமே அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும். அப்போது தான் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அதில் இரண்டு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் உட்பட 3 நீதிபதிகள் இருப்பார்கள். இதுவே விசாரணையின் 2ம் கட்டமாகும். இந்தக் கட்டத்திற்குள் தான் இப்போது விசாரணை நுழைந்துள்ளது.
இதில் தான் தீவிர விசாரணை நடத்தப்படும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும். அதில் தெரிய வரும் தகவல்களை வைத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications