நிலக்கரி இறக்குமதி...மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு - மின் வெட்டு பிரச்சினை சரியாகுமா?
அனைத்து மாநிலங்களும் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை சரிசெய்ய, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாநிலங்களும் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மின்சார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியாமல் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பப்பட்டுள்ளது.
நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் அனல் மின் நிலையங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு விரைவாக தீர்ந்து வருகிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் மின்சாரத்தேவை அதிகரிப்பு இதற்கு காரணமாகும்
இதனைத் தொடர்ந்து நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்க 1100 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின்நிலையங்களில் சில யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மின்சார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மே மாத இறுதிக்குள் நிலக்கரி இறக்குமதி செய்ய மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இதுவரை நான்கு மாநிலங்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நிலக்கரி இறக்குமதி தொடர்பாக மாநில அரசுகளுடன், மத்திய மின்துறை அமைச்சர் ஆர் கே சிங் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நீர்மின் நிலையங்களுக்கான நிலக்கரி, உள்நாட்டு நிலக்கரி விநியோகம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன. அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரியின் அளவை ஈடுசெய்ய தனியார் சுரங்கங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். ரயில் மற்றும் சாலைகள் வழியாக மின் உற்பத்தி ஆலைகளுக்கு தேவைப்படும் நிலக்கரியை கொண்டு செல்ல வேண்டும் என்று அமைச்சர் ஆர் கே சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," அனைத்து மாநிலங்களும் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே நிலக்கரி இறக்குமதி செய்ய ஆர்டர் அளித்துள்ளன. பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள் டெண்டரை இறுதி செய்யும் நிலையில் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.