பாம்பு பிடி வீரரின் ரீல்ஸ் மோகம்.. கழுத்தை சுற்றிய கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு.. இறுதியில் ட்விஸ்ட்
டெல்லி: பாம்புகளை பிடிப்பவர்கள் எவ்வளவு துணிச்சலானவர்களாக இருந்தாலும், கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும், கொடிய விஷமுள்ள நாகங்கள் தன்னை பிடிப்பவர்களை ஒரே கடியில் காலி செய்யும் வல்லமை உடையவை. பொதுவாகவே கடந்தசில மாதங்களில் பாம்பு பிடி வீரர்கள் அடுத்தடுத்து பாம்புகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 'ரீல்ஸ்' மோகத்தில் கழுத்தில் போட்டு சுற்றிய பாம்புபிடி வீரர், அதே பாம்பு எமனாக மாறி உள்ளது.
பாம்புகள் யாரையும் தேடிப்போய் கடிக்கும் குணம் கொண்டவை கிடையாது. இரை தேடி செல்லும் போது, பாம்புகள் எங்காவது மனிதர்கள் தென்பட்டால் அங்கு தப்பிக்கவே பார்க்கும். ஆனால் யாராவது பாம்புகளை மிதித்தால் கடித்துவிடும். அதேபோல் மிக நெருக்கமாக நின்று பாம்புகளை அச்சுறுத்தும்வகையில் இருந்தால் கடித்துவிடும். தன்னை தற்காத்துக் கொள்ளவே பாம்புகள் பொதுவாக விஷத்தை தள்ளும்.

அதேநேரம் முடிந்தவரை அச்சுறுத்தி அவர்களை துரத்தவே பார்க்கும். ஆனால் அதையும் மீறி அவர்கள் பாம்பை தொந்தரவு செய்தால், அல்லது கைகளால் பிடிக்க முயன்றால் மட்டுமே கடிக்கும். பாம்பு பிடி வீரர்கள் இத்தகைய ஆபத்துகளை கடந்து தான் பாம்புகளை பிடித்து காடுகளில் விடுகிறார்கள். அவர்களுக்கு பாம்புகளின் குணம் தெரியும் என்பதால், பாம்புகளை லாவகமாக பிடித்து காடுகளில் விடுகிறார்கள்,
அப்படித்தான் மத்தியபிரதேச மாநிலம் குணால் மாவட்டத்தை சேர்ந்த 42 வயதாகும் தீபக் மஹாவர் என்ற பாம்புபிடி வீரர், பல்வேறு பகுதிகளில் பாம்புகளை பிடித்த அனுபவம் கொண்டவர் ஆவார். இந்நிலையில் குணால் மாவட்டத்தின் பர்பத்புரா கிராமத்தில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதை பிடிக்க வருமாறும் தீபக் மஹாவருக்கு கல்வி நிறுவனம் சார்பில் அழைப்பு வந்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர், அந்த விஷப்பாம்பை லாவகமாக பிடித்தார்.
அப்போது பள்ளியில் படிக்கும் அவருடைய மகனை அழைத்துவருமாறு அவருக்கு வீட்டில் இருந்து போன் வந்தது. இதையடுத்து கொடிய விஷமுள்ள அந்த நாகப்பாம்பை அவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். வழியில் தனது கழுத்தில் பாம்பு கிடப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதனை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டார்.
கழுத்தில் பாம்புடன், மகனை அழைத்துக்கொண்டு வரும் வழியில் தீபக் மஹாவரின் கையில் அந்த பாம்பு கடித்துவிட்டது. இதில் அவரது உடலில் விஷம் ஏறியது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தீபக் மஹாவர் உயிரிழந்தார். இந்தநிலையில் தீபக் மஹாவர், விஷப்பாம்பை கழுத்தில்போட்டு சுற்றிய ரீல்ஸ் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications