கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம்
டெல்லி: உலகை அதிரவைத்துக் கொண்டிருக்கும் 'காக்ரோச் ஜனதா கட்சி', அதாவது கரப்பான் பூச்சி கட்சி குறித்து பாஜகவினர் சில கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலடியும் கிளம்பியுள்ளது. கரப்பான் பூச்சி கட்சிக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்ற மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு, ஆதாரப்பூர்வமான ஸ்கிரீன் ரெக்கார்டிங்கை வெளியிட்டு அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்தைத் தொடர்ந்து 'காக்ரோச் ஜனதா கட்சி' தொடங்கப்பட்டது. இந்தப் பக்கம் தொடங்கப்பட்டுக் குறுகிய நாட்களிலேயே இன்ஸ்டாகிராமில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸையே முந்தி இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் இயக்கமாக மாறியது. குறிப்பாக, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக இளைஞர்களின் ஆக்ரோஷக் குரலாக இது உருவெடுத்தது.

வெளிநாட்டு சதி
இந்நிலையில், இந்தக் கட்சியின் அசுர வளர்ச்சிக்குப் பின்னால் வெளிநாட்டு சதி இருப்பதாக மத்திய அரசுத் தரப்பில் பகிரங்கக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், கட்சியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
மத்திய அமைச்சர்கள்
இது தொடர்பாக அவர், "சமூக வலைத்தளங்களில் தங்களின் ஃபாலோயர்களுக்காக பாகிஸ்தானிடமும், பில்லியனர் ஜார்ஜ் சோரோஸ் கும்பலிடமும் கையேந்துபவர்களைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. தேவையான ஃபாலோயர்கள் இந்தியாவிலேயே போதுமான அளவு இருக்கிறார்கள்! இந்தத் தேசவிரோதக் கும்பலிடமிருந்து யாரும் தங்களின் அங்கீகாரத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை!" எனப் பதிவிட்டார்.
இவரைத் தொடர்ந்து மற்றொரு மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காக்ரோச் ஜனதா கட்சியின் சமூக வலைத்தளங்களை பின்தொடர்பவர்களில் 49 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.. வெறும் 9 சதவீதம் பேர் மட்டுமே இந்தியர்கள்" என்றார். மேலும், இது இந்திய அரசை நிலைகுலைய வைக்க வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படும் கிராஸ்-பார்டர் சதிவலை எனப் பாஜக மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
கரப்பான் பூச்சி கட்சி
இந்தச் சூழலில் தான் அமைச்சர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாக எக்ஸ் தளத்தில் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார் கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே! இது தொடர்பாக அவர், ""எங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதற்கு முன்பாக, ஊடகங்களுடன் நாங்கள் பகிர்ந்துகொண்ட எங்களது பக்கத்தின் ஆடியன்ஸ் டெமோகிராஃபிக் ஸ்கிரீன் ரெக்கார்டிங்கை பாருங்கள்.. 94 சதவீதத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.. அப்படியிருக்க மத்திய அமைச்சராக இருக்கும் கிரண் ரிஜிஜு, உரிமைகளுக்காகப் போராடும் இந்திய இளைஞர்களைப் பாகிஸ்தானியர்கள் என்று எப்படி முத்திரை குத்தலாம்?" என்றார்.
நடவடிக்கை ஏன்!
நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனச் சிஜேபி ஆன்லைனில் ஒரு மெகா பிரச்சாரத்தைத் தொடங்கியது. தங்களின் இணையதளம் முடக்கப்படுவதற்கு முன்பு வரை, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கோரி சுமார் 6 லட்சம் பேர் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டிருந்தனர் என்றும், 10 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் தங்களிடம் பதிவு செய்திருந்தனர் என்றும் திப்கே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், "அரசின் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனுக்காகக் கல்வி அமைச்சர் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாகக் கேள்வி கேட்டதற்காகக் காக்ரோச் ஜனதா கட்சியின் மீது பழிவாங்கும் நடவடிக்கை பாய்கிறது" என்று கொதித்துள்ளார் திப்கே!
கரப்பான் பூச்சி கட்சி பேக்
தற்போது இந்த CJP கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம், திப்கேவின் தனிப்பட்ட கணக்குகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவை ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாகவும், தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இருப்பினும், 'Cockroach is Back' என்ற மாற்று ட்விட்டர் கணக்கு மூலம் இந்த டிஜிட்டல் இயக்கம் தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications