தேர்தலில் போட்டியிடலையே..பணம் மட்டும் இல்லாமல் நிர்மலா சீதாராமன் சொன்ன இன்னொரு காரணம்தான் 'ஹைலைட்'
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக தலைமை கேட்டுக் கொண்டும் தாம் போட்டியிடாததற்கு பணம் ஒரு காரணம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அதே நேரத்தில் தாம் சார்ந்திருக்கும் சமூகம், ஜாதி ஆகியவையும் தாம் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க காரணம் என்பதையும் விளக்கி இருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஆந்திராவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் தமிழ்நாட்டு அரசியலில் நிர்மலா சீதாராமன் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறவர். தமிழ்நாட்டின் பாஜக தலைவராக, தமிழ்நாடு பாஜகவின் முதல்வர் வேட்பாளராக என்றெல்லாம் நிர்மலா சீதாராமன் பெயர் அடிபடுவது வழக்கம். தற்போதைய லோக்சபா தேர்தலிலும் தமிழ்நாட்டில் நிர்மலா சீதாராமன் போட்டியிடக் கூடும் எனவும் கூறப்பட்டது. இன்னொரு பக்கம் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் பாஜக வேட்பாளராக நிர்மலா சீதாராமன், லோக்சபா தேர்தல் களத்தில் இறங்கவில்லை.
இது தொடர்பாக TIMES NOW Summit 2024 நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிர்மலா சீதாராமன், ஆந்திரா அல்லது கர்நாடகா மாநிலத்தில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என பாஜக தலைவர் ஜேபி நட்டா என்னைக் கேட்டுக் கொண்டார். அப்போது 10 நாட்கள் அவகாசம் கேட்டேன். 10 நாட்களுக்குப் பின்னர் தீவிரமாக ஆலோசித்தி நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றேன். என்னிடம் போதுமான "நிதி" இல்லை. அதனால் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறிவிட்டேன் என்றார்.
மேலும் அதே நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், ஆந்திராவிலோ தமிழ்நாட்டிலோ போட்டியிடுவதற்கு பணம் இல்லை என்பது மட்டும் ஒரு காரணம் அல்ல. வேட்பாளரின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் பல காரணிகளும் இருக்கின்றன. நீங்கள் இந்த ஜாதியா? நீங்கள் இந்த மதமா? நீங்கள் அவரா? இவரா? என்பவையும் அதில் அடங்கும். இதை எல்லாம் நம்மால் சமாளிக்க முடியாது என்பதும் ஒரு காரணம் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான் என்றாலும் தமிழ்நாட்டு அரசியலில் மிக மிக கடுமையாக விமர்சிக்கப்படுவரும் நிர்மலா சீதாராமன் தான். அண்மையில் இலவசங்களைப் பெறக் கூடிய மக்களை பிச்சைக்காரர்கள் என இழிவுபடுத்திவிட்டார் நிர்மலா சீதாராமன் என சர்ச்சை வெடித்தது. தூத்துக்குடி வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த இடத்தில் கோவில் அர்ச்சகரின் ஊதிய பிரச்சனை குறித்து பஞ்சாயத்து பேசியதும் பெரும் சர்ச்சையானது. அத்துடன் தமிழ்நாடு, தமிழர்கள் குறித்த கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்கும் தொனியும் உடல் மொழியும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மிக கடுமையாகவே நீண்டகாலமாகவே விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இத்தகைய காரணங்களால் தமிழ்நாட்டில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட நிர்மலா சீதாராமன் மறுத்திருக்கலாம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். அதே நேரத்தில் கர்நாடகாவில் பாஜக எளிதாக வெல்லக் கூடிய கோட்டையாக கருதும் 2 தொகுதிகளில் ஒன்றில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது என்பதையும் மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications