போலி கொரோனா டூல்கிட்: பாஜக தலைவர் நட்டா, சம்பித் பத்ரா மீது காங். புகார்- டெல்லி போலீஸ் வழக்கு பதிவு!
டெல்லி: கொரோனா விவகாரத்தில் போலியான டூல்கிட்டை தயாரித்ததாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்டோர் மீது காங்கிரஸ் கட்சி டெல்லி போலீசில் புகார் கொடுத்துள்ளது. இதனடிப்படையில் ஜேபி நட்டா, சம்பித் பத்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தமது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியின் மரியாதையை சிதைக்கும் வகையில் டூல் கிட் ஒன்றை தயாரித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸை மோடியின் உருமாறிய கொரோனா வைரஸ் என அழையுங்கள் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை சமூக வலைதள செயற்பாட்டாளர்களுக்கு காங்கிரஸ் பிறப்பித்துள்ளது.
சூப்பர் ஸ்பிரெடர் கும்பமேளா
மேலும் ஹரித்வார் கும்ப மேளாவை சூப்பர் ஸ்பிரெடர் கும்பமேளா என்ற அழைக்கவும் காங்கிரஸ் அந்த டூல்கிட்டில் பரிந்துரைத்துள்ளது. கொரோனா காலத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோடி மீதான மரியாதை சிதைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரும்புகிறார்.
காங். மீது விமர்சனம்
வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உதவியுடன் பிரதமர் மோடியின் மதிப்பை சீர்குலைக்க காங்கிரஸ் கட்சி இந்த டூல்கிட்டை உருவாக்கி இருக்கிறது என்று சரமாரியாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த டூல் கிட்டை முன்வைத்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் சமூக வலைதளப் பக்கங்களில் கடும் விமர்சனத்தை வைத்திருந்தனர்.
காங். தலைவர்கள் மறுப்பு
ஆனால் காங்கிரஸ் கட்சி இப்படியான ஒரு டூல்கிட்டை உருவாக்கவே இல்லை என திட்டவட்டமாக மறுத்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் பெயரில் பாஜகதான் போலியான டூல்கிட்டை உருவாக்கி இருக்கிறது என்பதும் காங்கிரஸின் புகார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இதனை தமது ட்விட்டரில் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
டெல்லி போலீசார் வழக்கு
மேலும் இது தொடர்பாக ஜேபி நட்டா, சம்பித் பித்ரா மீது போலீசில் புகார் தெரிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் கவுடா கூறியிருந்தார். அத்துடன் ஜேபி நட்டா, சம்பித் பத்ரா மீது டெல்லி போலீசில் காங்கிரஸ் கட்சி புகார் கொடுத்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஜேபி நட்டா, சம்பித் பித்ரா மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவு விவரங்களையும் காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.