நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளைத்தான் பேசுவேன்..திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன்
டெல்லி: நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளைத்தான் பேசுவேன்; முடிந்தால் என்னை கைது செய்து கொள்ளுங்கள் என திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறியுள்ளார்.
Recommended Video
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ராஜ்யசபா தலைவராக உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ந் தேதி நிறைவடைகிறது. ஆகையால் வெங்கையா நாயுடு தலைவராக இருந்து நடத்தும் கடைசி ராஜ்யசபா கூட்டம் இதுவாகும்.

அனைத்து கட்சிக் கூட்டம்
நாடாளுமன்றம் கூட்டப்படுவதை முன்னிட்டு வழக்கம் போல ஒருநாள் முன்னதாக ஜூலை 17-ந் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

வார்த்தைகளுக்கு தடை
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டங்களில் எந்தெந்த வார்த்தைகளை எம்.பி.க்கள் பயன்படுத்தக் கூடாது என்கிற ஒரு கையேட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த கையோடு இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. பொதுவாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பயன்படுத்துகிற வார்த்தைகள் பெரும்பாலானவை இப்போது அன்பார்லிமெண்ட்ரி வேர்டு- தடை செய்யப்பட்ட வார்த்தைகளாகிவிட்டன.

தடை செய்யப்பட்ட வார்த்தைகள்
அதாவது வெட்கக்கேடு, துரோகம், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், நாடகம், கபட நாடகம், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இதுதான் இப்போது பெரும் விவாதமாகி உள்ளது.

எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு
இது தொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் எம்.பி, மத்திய அரசின் இந்தப் போக்கு கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தடை செய்திருக்கும் அத்தனை வார்த்தைகளையுமே நான் நாடாளுமன்றத்தில் பேசுவேன். என்னை கைது செய்து கொள்ளலாம் என கொந்தளித்துள்ளார். அதேபோல் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ், வார்த்தைகளைத் தொடர்ந்து வேறு எதை தடை செய்வீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா, சங்கி என்ற வார்த்தையை மட்டும்தான் மத்திய பாஜக அரசு தடை செய்யாமல் இருக்கிறது என கிண்டலடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications