உச்சநீதிமன்றத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து பிழையான அறிக்கையை தாக்கல் செய்த மத்திய அரசு
டெல்லி: உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பாக உச்சநீதிமன்றதிதில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் பிழை இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
B.1.617 என்ற கொரோனா வைரஸை இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் என ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அத்துடன் B.1.617 வைரஸை இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் என குறிப்பிடக் கூடாது; இது தேசத்தின் மதிப்பை சீர்குலைக்கிறது எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த உலக சுகாதார நிறுவனமும் தங்களது அறிக்கையில் அப்படி எதுவும் குறிப்பிடவில்லை என தெரிவித்திருந்தது.
மத்திய அரசு இப்படி விளக்கம், எச்சரிக்கை கொடுப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக கொரோனா வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில் இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் என்றே மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது.
இதனை காங்கிரஸ் மூத்த தலைவர்களான பவன் கெரா, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தமது ட்விட்டர் பக்கத்தில், எங்களுடைய சகா பவன் கெரா, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
உலக நாடுகளை அப்படி எல்லாம் சொல்லக் கூடாது என கூறுகிற மத்திய அரசே அப்படியான ஒரு வார்த்தையை பயன்படுத்தி உள்ளது. அதேபோல் இங்கிலாந்தின் உருமாறிய கொரோனா வைரஸ் என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications