கட்சி மாறி வந்தவர்களை திருப்திப்படுத்தவே மத்திய அமைச்சரவை விரிவாக்கம் -காங்கிரஸ் விமர்சனம்
டெல்லி: மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செயல்திறன் அடிப்படையிலோ, நிர்வாகத் திறன் அடிப்படையிலோ செய்யப்படவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, செயல்திறனை அளவுகோலாக வைத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அதில் பிரதமர் மோடியை தான் முதலில் நீக்கியிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தங்களுக்குள் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளவும், கட்சி மாறி வந்தவர்களை திருப்திப்படுத்தவும் தான் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது நண்பர்கள் நலனுக்காக மந்திரிசபையை மாற்றி அமைத்துள்ளதாக சாடியுள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில் பிரதமர் மோடி தனது பொறுப்பை தட்டிக் கழித்தார் என்றும் அவரது செயல்திறன் எப்போது மதிப்பிடப்படும் எனவும் ரன்தீப் சுர்ஜேவாலா வினவியுள்ளார்.
சீனாவுடனான எல்லை மோதலை முறையாக கையாள தவறியதற்காக ராஜ்நாத் சிங்கையும், கும்பல் வன்முறைகள் தொடர்வதால் அமித்ஷாவையும், பொருளாதார சீர்குலைவுக்காக நிர்மலா சீதாராமனையும் அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அமைதி, வளர்ச்சி, நல்லிணக்கம் ஆகியவை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளதாகவும், மோடி ஒரு சர்வாதிகாரியை போல் செயல்படுவதாகவும் ரன்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications