அதெப்படி குலாம் நபி ஆசாத்? ஏன் கார்கே இல்லை? ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவில் இடம் பெற காங். மறுப்பு!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்த ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராயும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் இடம்பெறுவதற்கு காங்கிரஸ் மறுத்துவிட்டது. காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் அக்குழுவில் இடம்பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆனால் மத்திய அரசு திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22 வரை நடத்த உள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இம்மசோதா நிறைவேறினால் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில சட்டசபைகளும் கலைக்கப்பட்டு லோக்சபா தேர்தலுடன் ஒரே தேர்தலாக நடத்தப்படும் நிலைமை உருவாகும். இதனை எதிர்க்கட்சிகள் மிக கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இக்குழுவில் இடம் பெறும் உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இடம் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் மத்திய அரசின் இந்தக் குழுவில் இடம்பெற முடியாது என காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அனுப்பிய கடிதத்தில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த குழுவில் இடம்பெறவில்லை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைப்பதாகும். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பதில் தனிக்கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத்தை அக்குழுவில் இடம்பெறச் செய்திருப்பது ஏற்க முடியாது. ஆகையால் மத்திய அரசு குழுவில் காங்கிரஸ் இடம் பெற முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications