காங்கிரஸ் தலைவர் ரேஸ்.. சோனியா ஆதரவு யாருக்கு? ‘குறுக்கே புகுந்த 2 தலைகள்’.. இன்று முடிவு தெரியும்!
டெல்லி : காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக் அல்லது மீரா குமார் ஆகியோரில் ஒருவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சி மேலிடத்தால் முன்னிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்று அசோக் கெலாட் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக் விஜய் சிங், சசி தரூர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதுதவிர, மேலும் சில தலைவர்களும் இன்று மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா காந்தியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் யார் என்பது இன்னும் உறுதி ஆகாத நிலையில், மேலும் இருவரின் பெயர்களும் அடிபடுவதால் காங்கிரல் கட்சியில் பரபரப்பு நிலவுகிறது.
காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலக காரணம் என்ன?
காங்கிரஸ் தலைவர் பதவி
2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று, ராகுல் காந்தி காங். தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டது காங்கிரஸ். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது.
இன்று கடைசி நாள்
இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். அக்டோபர் 1-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று அன்றைய தினம் வேட்பாளர் பட்டியல் வெளியிட உள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 8-ம் தேதி கடைசி நாள். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் 9,000 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அந்தந்த மாநில தலைமை அலுவலகங்களில் அக்டோபர் 17-ம் தேதி காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
சசி தரூர் - திக் விஜய் சிங்
காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கும், தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது. கேரளாவில் ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இருந்த திக்விஜய் சிங், திடீரென டெல்லி சென்றார்.
பின்வாங்கிய அசோக் கெலாட்
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், தலைவர் ரேஸில் இருந்து அவர் விலகியிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.அந்தோணியை சோனியா திடீரென சந்தித்துப் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜி23 தலைவர்கள் திடீர் மீட்டிங்
இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி குழுவான ஜி23 தலைவர்கள் நேற்று இரவு திடீர் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா வீட்டில் நேற்று ரவு ஹரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபேந்தர் சிங் ஹூடா, மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான், முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி உள்ளிட்ட ஜி23 குழுவை சேர்ந்த தலைவர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா நேற்றிரவு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்துப் பேசினார்.
நேரு குடும்ப ஆதரவு யாருக்கு?
இந்நிலையில், காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் முகுல் வாஸ்னிக் மற்றும் மீரா குமார் ஆகியோரில் ஒருவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேரு குடும்பத்தின் ஆதரவுடன் அவர்களில் ஒருவர் முன்னிறுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகியபோதே காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக் பெயர் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று விடை கிடைக்கும்
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், சுஷில்குமார் ஷிண்டே, குமாரி செல்ஜா உள்ளிட்டோரின் பெயர்களும் தலைவர் பதவிக்கான போட்டியில் அடிபடுகின்றன. இன்று வேட்பு மனு தாக்க செய்வதற்கான கடைசி நாள் என்பதால், காங்கிரஸ் தலைவர் ரேஸில் யார் யார் என்ற குழப்பத்திற்கு இன்று விடை கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.