வட இந்தியாவில் மொத்தமாக காலியாகும் காங்கிரஸ்? ஒரே நாளில் 2 மாநிலங்கள் போச்சு! நிலைமை ரொம்ப மோசம்
டெல்லி: இன்று ஒரே நாளில் இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ள நிலையில், வட இந்தியாவில் காங்கிரஸ் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.
இன்று 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், ஒரே நாளில் இரு மாநிலங்களையும் காங்கிரஸ் இழந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செய்தி இருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தேர்தல் முடிவுகள்: இன்றைய தினம் ஒரே நாளில் வட இந்தியாவில் காங்கிரஸ் இரு மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், அவர்கள் பின்னடைவே சந்தித்துள்ளனர். அதைக் காட்டிலும் சத்தீஸ்கரில் நிச்சயம் காங்கிரஸ் வெல்லும் என பலரும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அங்கேயும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி தோல்வி தான் கிடைத்துள்ளது.
வட இந்தியாவில் காங்கிரஸ் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. பாஜகவின் பலம் அங்கே அதிகரித்துக் கொண்டே இருப்பதையே இது காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே வட இந்தியாவில் பாஜக, தென் இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் என்ற டிரெண்ட் தான் இருக்கிறது. சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் இதையே தான் காட்டுகிறது.
காங்கிரஸ்: கடந்தாண்டு பல்வேறு வடமாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியால் ஒரே ஒரு மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவை வீழ்த்த முடியவில்லை. 2022 பிப். மார்ச் காலகட்டத்தில் உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது.
அதில் அத்தனை மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடனும் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடனும் பாஜக ஆட்சியை அமைத்தது. பஞ்சாபில் பாஜக வலுவாக இல்லாத நிலையில், அப்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி வீழ்த்தியது.
ரொம்ப மோசம்: கடந்தாண்டு இறுதியில் ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் தேர்தல் நடந்த நிலையில், இமாச்சலில் மட்டும் காங்கிரஸ் வென்றது. பாஜக தனது கோட்டையான குஜராத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கடந்தாண்டு 7 வட மாநிலங்களில் தேர்தல் நடந்த நிலையில், அதில் 6இல் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.
இந்தாண்டு தொடக்கத்தில் 3 வடகிழக்கு மாநிலங்கள்- திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தில் தேர்தல் நடந்த நிலையில், அங்கும் காங்கிரஸ் கட்சியால் சோபிக்க முடியவில்லை. அதேநேரம் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக கூட்டணி தனது அரசைத் தக்க வைத்துக் கொண்டது. அப்போது தென் மாநிலமான கர்நாடகாவில் மட்டும் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது எங்கே: தற்போதைய சூழலில் வட இந்தியாவில் இமாச்சல் பிரதேசத்தில் மட்டுமே காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் ஆளும் ஆர்ஜேடி, ஜேடியு கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் காங்கிரஸ் இடம் பிடித்துள்ளது.
ஆனால், இந்த 3 மாநிலங்களைத் தவிர்த்துப் பார்க்கும் போது, காங்கிரஸ் வட மாநிலங்களில் எந்தவொரு இடத்திலும் ஆட்சியில் இல்லை. நாளுக்கு நாள் வடமாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமடைந்தே வருகிறது. உபி. போன்ற மாநிலங்களில் இருந்து அதிகப்படியான லோக்சபா எம்பிக்கள் தேர்நெடுக்கப்படும் நிலையில், இது காங்கிரசுக்கு இறுதி எச்சரிக்கை மணியாக இருக்கிறது.
வட இந்தியாவில் காங்கிரஸ் தன்னை வலிமைப்படுத்தினால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும். மேலும், அங்கே வலுவான ஒரு கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications