பிரதமர் மோடி அறிமுகம் செய்த புதிய இரண்டு வார்த்தை... ப.சிதம்பரம் பதிலடி ட்வீட்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பயன்படுத்திய 'andolan jeevi' எனும் வார்த்தைக்கு பதில் கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் தலைவர் ப சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் 4 லட்சம் அல்ல 40 லட்சம் டிராக்டர்கள் அணிவகுக்கும் என்றும் டெல்லியில் போராடும் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழலில், சமீபத்தில் மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, "சில புதிய வகை நபர்கள் உருவாகியுள்ளனர். ஒரு புதிய கூட்டம் உருவாகியிருக்கிறது. அவர்கள் வக்கீல்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம் என்று எந்த போராட்டம் நடந்தாலும், அங்கே இருப்பார்கள். இவர்களிடம் நாடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அவர்களால் போராட்டமின்றி வாழ முடியாது... நாம் அவர்களை அடையாளம் காண வேண்டும், தவறான கருத்தியலை போதித்து தவறாக வழிநடத்துகிறார்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அவமதிக்கும் விதமாக பிரதமரின் பேச்சு உள்ளதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், "நான் ஒரு பெருமைமிகு andolan jeevi. அதில், மகாத்மா காந்தி ஆகச்சிறந்தவர்" என்று பதிலளித்துள்ளார்.