வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி! இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி
டெல்லி: லோக்சபா தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தார். நமது நாட்டு விதிகளின்படி இரண்டு தொகுதிகளில் வெல்லும் ஒருவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதையடுத்து அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு அபார வெற்றியைப் பெற்றார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதனையடுத்து இரு தொகுதிகளில் ஒன்றின் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தாக வேண்டும். அதாவது 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர், 14 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதி எம்பி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி.

இது தொடர்பாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நான் மோடியைப் போல பரமாத்மா இல்லை. சாமானிய மனிதன்தான். மக்களுடன் கலந்து பேசி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய வகையில் எந்த தொகுதி எம்பி பதவியை தக்க வைப்பது என முடிவு செய்து அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்வார் என்றே காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின. வட இந்தியாவில் குறிப்பாக உ.பி.யில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ரேபரேலி தொகுதி எம்பி பதவியை தக்க வைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக லோக்சபா செயலகத்தை ராகுல் காந்தி தரப்பு தொடர்பு கொண்டு ராஜினாமா தொடர்பான நடைமுறைகளைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
அந்த இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications