இதை சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன்! ஸ்டாலினிடம் கலகலத்த சோனியா.. வெடித்து சிரித்த ராசா.. என்னாச்சு?
டெல்லி: டெல்லி சென்று இருக்கும் முதல்வர் ஸ்டாலினை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் எம்பி சோனியா காந்தி சந்தித்து பேசினார்.
டெல்லியில் ஏப்ரல் 2-ம் தேதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடக்க உள்ளது. திமுக சார்பாக திறக்கப்படும் இந்த கட்டிட விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று இருக்கிறார். இன்று டெல்லி சென்ற முதல்வரை ஸ்டாலினை அங்கு இருந்த திமுக எம்பிக்கள், தலைவர் வரவேற்றனர்.
அதிகாலையில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வு எடுத்த முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் இருந்து பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

ஸ்டாலின் டெல்லி
இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்றம் வந்தார். நாடாளுமன்ற வளாகத்தில்தான் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைத்தார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தொடங்கி நீட் ரத்து மசோதா வரை பல்வேறு விஷயங்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இதில் பேசினார். அதோடு திமுக அலுவலக திறப்பு விழாவிற்கும் முதல்வர் ஸ்டாலின் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

ஸ்டாலின் மோடி
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்ற போது அவர் உள்ளே சென்று எம்பிக்கள் அமரும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அலுவல் கூட்டங்கள் நடக்காத நிலையில், அங்கிருந்த எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேசினார். திமுக எம்பிக்கள் மட்டுமின்றி மற்ற தோழமை கட்சி எம்பிக்கள் பலர் அங்கே முதல்வர் ஸ்டாலினுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர். அவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ஸ்டாலின் சோனியா
இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. முதல்வர் ஸ்டாலின் அங்கு செல்லும் முன்பே சோனியா காந்தி அங்கு சென்று 2 நிமிடம் காத்து இருந்தார். அப்போது சோனியா காந்தியுடன் திமுக எம்பி கனிமொழி சிரித்தபடி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் வந்ததும் அவரை பார்த்து கும்பிட்டு வணக்கம் என்று சோனியா கூறினார்.

சோனியா காந்தி
உங்களிடம் வணக்கம் என்று சொல்லிவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன். நான் இப்போது செல்ல வேண்டும். நாம் மீண்டும் சனிக்கிழமை சந்திக்கலாம். திமுக அலுவலகம் திறப்பு விழா அப்போது உள்ளது. அன்று நாம் சந்திக்கலாம் என்று சோனியா காந்தி குறிப்பிட்டார். சோனியா இப்படி இயல்பாக பேசியதை கேட்டு அங்கிருந்த திமுக எம்பிக்கள் ஆ ராசா, கனிமொழி, டிஆர் பாலு ஆகியோர் வெடித்து சிரித்தனர். முதல்வர் ஸ்டாலினும் சிரித்தபடி அவருக்கு நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications