பீகார் வாக்காளர் திருத்த பணி: நாடாளுமன்றத்தில் கடும் அமளி.. மதியம் 12 மணி வரை 2 சபையும் ஒத்திவைப்பு
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலையொட்டி அங்கு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் முறையை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் கவுரவ் கோகாய், மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் அதனை ஏற்க மறுத்ததால் எதிர்க்கட்சியினர் கடும் அமளி செய்தனர். இதையடுத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது.

காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவை தொடங்க உள்ளன. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் சார்பில் லோக்சபாவில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பிக்கள் கவுரவ் கோகாய் மற்றும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் இந்த ஒத்திவைப்பு நோட்டீஸை வழங்கி உள்ளனர். பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இப்படியான சூழலில் தான் பீகார் சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியது.
ஆனால் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அதனை ஏற்கவில்லை. இன்றைய தினம் வேளாண் துறை சார்ந்த கேள்வி நேரம் தான் பட்டியலிடப்பட்டு இருந்தது. இதனால் மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ‛‛வேளாண் துறை கேள்வி நேரத்துக்கு எதிர்க்கட்சியினர் ஒத்துபை்பு கொடுக்க வேண்டும்’’ என்றார். ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அதனை ஏற்கவில்லை. பீகார் சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் லோக்சபா நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தியதால் அந்த சபையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இப்போது பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணியை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (Special Intensive Revision - SIR) தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடைசியாக 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சுமார் 2 கோடிக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வெளிமாநிலங்களில் உள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் நீக்கப்படலாம். இது பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையலாம் என்று ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால் இந்த திருத்தத்தை முறைப்படுத்தப்படுத்த வேண்டும். கூடுதல் காலஅவகாசத்துடன் இந்த பணியை முறைப்படி செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். அதோடு இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.
ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தடை விதிக்க மறுத்தது. அதுமட்டுமின்றி வாக்காளர் திருத்த பணிக்கு ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications