வாய்ப்பில்ல ராஜா.. மாதத்திற்கு 6,000 ரூபாயா?... ‘நிதி ஆயோக்’ முன்னாள் து.தலைவர் விமர்சனம்
Recommended Video
டெல்லி: ஏழை மக்களின் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமற்றது என 'நிதி ஆயோக்' முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பானகாரியா தெரிவித்துள்ளார்.
5 கோடி குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் நியாய் ( NYAY) திட்டத்தை காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.
சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் 500 வீதம் ஆண்டுக்கு 6,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற பாஜகவின் திட்டத்தை விட, ராகுலின் இந்த வாக்குறுதி, அதிரடி அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் 5 முக்கிய அம்சங்கள் இவைதான்!
பட்ஜெட்டில் 13 சதவீதம்
இந்த நிலையில், ‘நிதி ஆயோக்' முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பானகாரியா கூறுகையில், நியாய் ( NYAY) திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், 3.6 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், இது மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டில் 13 சதவீதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதிநிலை நெருக்கடி
திட்டத்தை செயல்படுத்துவதற்கு 3.6 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதியாதாரம் குறித்து யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், இந்த தொகை பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகம் என்றும் அரவிந்த் பானகாரியா தெரிவித்துள்ளார். நிதிநிலை நெருக்கடியாக இருக்கும்போது பட்ஜெட்டில் 13 சதவீதத்தை ஒதுக்குவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளார்.
நிதி எங்கிருந்து வரும்?
இதற்கிடையே, தற்போதைய ‘நிதி ஆயோக்' அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும் என்றும், இத்திட்டத்தை செயல்படுத்த எங்கிருந்து நிதி வரும் எனவும் கேள்வி எழுப்பினார்.
பொருளாதார சரிவு
இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. அவ்வாறு, இத்திட்டத்தை செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் 4% பின்னோக்கி சென்று விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
நாட்டின் பொருளாதாரத்தை எண்ணிப் பார்க்காமல் ராகுல் காந்தி இது போன்ற வாக்குறுதிகளை அளித்து உள்ளார். 1971 ஆம் ஆண்டு ‘வறுமையை அகற்றுவோம்' என இந்திரா காந்தி வாக்குறுதி அளித்தார், ஆனால் அந்த வாக்குறுதி இன்றுவரை சாத்தியமற்றதாக உள்ளது. ராகுல் காந்தியின் அறிவிப்பும் அதுபோல் அமைந்துவிடும் என்றும் விமர்சனம் செய்துள்ளார். ராஜீவ் குமாரின் இந்த பேச்சுக்கு விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.