நாளை வாக்கு எண்ணிக்கை.. டெல்லிக்கு வாங்க.. இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் திடீர் உத்தரவு
டெல்லி: வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் ஏறத்தாழ 12 மணி நேரமே இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் டெல்லிக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
543 லோக்சபா தொகுதிகள் கொண்ட லோக்சபாவிற்கு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி கடந்த 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை அடுத்த 5 வருடங்கள் ஆட்சி செய்யப்போவது யார் என்பது நாளை மாலைக்குள் கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற வியூகத்துடன் தேர்தலை எதிர்கொண்டது.
மறுபக்கம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்தலை சந்தித்தது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நேற்று முன் தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அதில், மத்தியில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.
இந்தியா கூட்டணிக்கு ஏறத்தாழ 150 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் கூறின. எனினும், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் உறுதியாக கூறி வருகின்றன. தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் போடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் ஏறத்தாழ 12 மணி நேரமே இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் டெல்லிக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. நாளை இரவு வரை அல்லது நாளை மறுநாள் காலை வரை டெல்லியிலேயே இந்தியா கூட்டணி கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளதாம்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பாசிடிவ் ஆன நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் எதிர்பார்த்த சீட்கள் கிடைக்காவிட்டால்.. உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவது, போராட்டம் அல்லது, குடியரசுத்தலைவரை சந்திப்பது என எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications