டெல்லி காங்கிரஸ் தலைவர் பாஜகவில் ஐக்கியம்! மக்களுக்கு சேவை செய்யவே இணைந்ததாக பேட்டி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில தலைவராக இருந்த அர்விந்த் லவ்லி சில நாட்களுக்கு முன்னர் பதவி விலகிய நிலையில், இன்று பாஜகவில் இணைந்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய லோக்சபா தேர்தல் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்.26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. தற்போது மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்திருக்கின்றன. மே 7ம் தேதியன்று 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளுக்கு 3ம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த லோக்சபா தேர்தலில் டெல்லி முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள 7 தொகுதிகளுக்கும் 6வது கட்டமாக மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லியில் அரசியல் சலசலப்புகள் அதிகரித்துள்ளன. அதாவது, டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்த் லவ்லி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, டெல்லியில் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.
மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 3 தொகுகளில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. இதனை காரணம் காட்டி அர்விந்தர் லவ்லி கட்சியிலிருந்து விலகியுள்ளார். “ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். காங்கிரஸ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திதான் ஆம் ஆத்மி கட்சியே உருவாக்கப்பட்டது. எங்கள் மீது விமர்சனங்களை வைத்துதான் அவர்கள் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் எப்படி அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க முடிந்தது? நான் உட்பட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இதனை கடுமையாக எதிர்த்தோம். எங்களுடைய எதிர்ப்புகளை அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மட்டுமல்லாது எங்களை சுயமாக முடிவெடுக்க விடாமல் தடுக்கிறார்கள். கடசியின் சில முக்கிய பொறுப்புகளில் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. இதை பலமுறை சட்டிக்காட்டிவிட்டோம். இருப்பினும் கட்சி தலைமை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
கட்சி மேலிடம், டெல்லி மாநில தலைவர் என்கிற ரீதியில் என்னிடம் எந்த கலந்தாலோசனையையும் மேற்கொள்ளவில்லை. வெறுமென ஒரு ஆள் என எங்களை வைத்திருக்கிறார்கள்” என்று குற்றச்சாட்டுகளை லவ்வி பதவி விலகும்போது வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லி பாஜக தலைவர் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருக்கிறார். இவருடன் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏக்களான ராஜ்குமார் சவுகான், நசீப் சிங் மற்றும் முன்னாள் காங்கிரஸ் இளைஞரணி தலைவரான அமித் மால்விக் ஆகியோர் பாஜகவில் இணைந்திருக்கின்றனர்.
இது குறித்து பேட்டியளித்த அர்விந்தர் லவ்லி, “பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வழிக்காட்டுதலின் கீழ் டெல்லி மக்களுக்காக போராட எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கொடி பறக்கும். அதேபோல, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்” என்று கூறியுள்ளார்.
அர்விந்த் லவ்லியின் கட்சித் தாவல் டெல்லி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications