3-வது முறையாக.... இப்போது கொரோனாவை காரணமாக வைத்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தல் 3-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக் தலைவர் தேர்தலை ஒத்திவைப்பது என காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் நிர்வாகிகள் கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; இதனால் தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
2017-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். 2 ஆண்டுகாலம் மட்டும் பதவியில் இருந்த ராகுல் காந்தி, 2019 லோக்சபா தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு இதுவரை காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா தொடர்ந்து நீடித்து வருகிறார். இதனிடையே காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்; தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என மூத்த காங். தலைவர்கள் போர்க்கோடி தூக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.