ஓவர் உஷாரு! 4 மாநில எம்எல்ஏக்களை பாதுகாக்க 'காப்பான்'களை இறக்கிய காங்.-தெலுங்கானாவில் யார் தெரியுமா?
டெல்லி: தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் புதிய எம்.எல்.ஏக்களை பாதுகாக்க மாநிலங்களுக்கு மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் இப்போதே அனுப்பி வைத்துவிட்டது.
தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த 4 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்புகள் பெரும்பாலும் குழப்பமான முடிவுகளையே தெரிவித்திருந்தன.

தெலுங்கானாவில் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் பிஆர்எஸ் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுக்கும் என கூறப்படுகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு சில இடங்கள்தான் வித்தியாசம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ், பாஜக இடையே நூலிழை வித்தியாசமே இருக்கலாம் என்கின்றன கருத்து கணிப்புகள்.
இதனால் தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் எம்.எல்.ஏக்களை வளைக்கும் குதிரை பேர அரசியல் சர்ச்சை வாக்கு எண்ணிக்கை முன்னரே தொடங்கிவிட்டது. 4 மாநிலங்களின் எம்.எல்.ஏக்களை மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று பாதுகாக்கும் ரிசார்ட் அரசியலில் காங்கிரஸ் முன்னெச்சரிக்கையாகவே தொடங்கிவிட்டது.
இதன் அடுத்த கட்டமாக தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும் மேலிடப் பார்வையாளர்களையும் காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது. பொதுவாக இந்த விஷயத்தில் காங்கிரஸ் மேலிடம் படு மெத்தனமாகவே இருக்கும். எல்லாம் கை மீறிப் போகிற நிலைமையில்தான் மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும். அதற்குள் பாஜக கன கச்சிதமாக அத்தனை வேலைகளையும் செய்து ஆட்சியை கைப்பற்றி அரியணையிலும் அமர்ந்துவிடும். இம்முறை மல்லிகார்ஜூன கார்கே ரொம்பவே உஷாராக வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே எம்.எல்.ஏக்களை பாதுகாக்கவும் ஒருங்கிணைத்து அடுத்த கட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மேலிடப் பார்வையாளர்களை அனுப்பி வைத்துவிட்டார்.
தெலுங்கானா மாநில மேலிடப் பார்வையாளர்களில் ஒருவராக 'ரிசார்ட் அரசியல்' புகழ் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பிஆர்எஸ் வளைத்துப் போட பேரம் பேசுவதாக நேற்றே டிகே சிவகுமார் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் காங்கிரஸ் புகார் கொடுத்தது. இதனால் 4 மாநிலங்களிலும் அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications