பிரதமர், ரயில்வே அமைச்சரிடம் கேட்க பல கேள்வி இருக்கு.. இப்போ இது முடியட்டும்: காத்திருக்கும் கார்கே!
டெல்லி : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உதவ கட்சி எல்லைகள் கடந்து அனைவரும் முன்வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பிரதமரிடம் கேட்க பல கேள்விகள் இருப்பதாகவும், அதற்கு இது சரியான நேரமில்லை என்றும் கார்கே கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி
வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானளது.

இந்த கோர ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கி, இதுவரை சுமார் 268 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் படுகாயமைடந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ரயில்வேயில் விபத்து தடுப்பு கருவிகள், பாதுகாப்பு அமைப்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேயின் 'கவச்' என்ற தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவு பிறப்பித்துள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளைச் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள், பாலசோர் மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர் என்று கார்கே தெரிவித்துள்ளார்.
மேலும், ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடியிடம் கேட்க பல கேள்விகள் உள்ளதாகவும், இருந்தபோதும் தற்போதைய சூழலில் மீட்பு பணிகளே முக்கியம் என்பதால், அதனை தள்ளி வைப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த தருணத்தில் அனைத்து காங்கிரஸ் கட்சி அமைப்புகளும் சாத்தியமான மற்றும் தேவையான உதவிகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சரிடம் கேட்க பல கேள்விகள் உள்ளன. ஆனால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளே தற்போது முக்கியம். அவற்றுக்கு முன்னுரிமை அளித்து அந்த கேள்விகள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications