பெட்ரோல் விலையேற்றம்: பொய் மூட்டைகளுடன் இந்தியாவை கொள்ளையிடுகிறார்கள்.. ராகுல் காந்தி ஆவசேம்
டெல்லி: பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தானைவிட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விலைப்பட்டியலுடன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தினசரி பைசா கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வந்தது. தற்போது அவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்கள் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தன.
இதனிடையே 10 நாட்களாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை அவதியடைய செய்து இருக்கிறது.

137 நாட்கள் உயராத விலை
கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.101.81 மற்றும் டீசல் விலை ரூ.91.88 ஆகவும் இருந்தன. 137 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி நீடித்து வந்த இந்த விலை, கடந்த மார்ச் 22 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டன.

இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை
அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை ரூ.106.69 ஆகவும் டீசல் விலை ரூ.96.76 ஆகவும் இருந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45 ஆகவும், டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.97.52 ஆகவும் உள்ளது.

10 நாட்களில் ரூ.6.05 காசுகள் விலையேற்றம்
சென்னையில் இதுவரை விற்பனையான பெட்ரோல், டீசல் விலையிலேயே இதுதான் உச்சபட்சம் என்று கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.6.05 காசுகளும் டீசல் விலை ரூ.6.09 காசுகளும் உயர்ந்துள்ளன.

ரூ.100 தாண்டிய டீசல் விலை
தமிழ்நாட்டில் முதல்முறையாக கொடைக்கானலில் டீசல் விலை ரூ.100 ஐ தாண்டி இருக்கிறது. அங்கு ஒரு லிட்டர் டீசல் ரூ.100.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொடைக்கானலில் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ.110.32 ஆக அதிகரித்துள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராகுல் காந்தி பதிவு
அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "ஃபகீரிடம் கேள்விகளை கேட்காதீர்கள். கேமராக்களின் மூலம் அறிவை பகிர்ந்துகொள்ளுங்கள். அவர் மூட்டை நிறைய ஜூம்லாக்களுடன் வந்து இந்தியாவை கொள்ளையடித்தார்." எனக்கூறினார். ஜூம்லா என்றால் பொய் வாக்குறுதிகள் என்று அர்த்தம்.

பாகிஸ்தான், இலங்கையைவிட இந்தியாவில் அதிகம்
அத்துடன் இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள பெட்ரோல் விலை குறித்தும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில், "ஆப்கானிஸ்தான்: ரூ.66.99, பாகிஸ்தான்: ரூ.62.38, இலங்கை: ரூ.72.96, வங்கதேசம்: ரூ.78.53, பூடான்: ரூ.86.28, நேபாளம்: ரூ.97.05, இந்தியா: ரூ.101.81." என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications