அதெப்படி இத்தனை பேர்? நீட் தேர்வு முறைகேடு.. மாணவர்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்க! பிரியங்கா காட்டம்
டெல்லி: நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தொடர்பான முறையான மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும், முறையான புகார்களை விசாரித்து தீர்வு காண்பது அரசின் பொறுப்பு அல்லவா?” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது.

நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் மே 5ஆம் தேதியான அன்று தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறுகிறது.
நீட் தேர்வு: சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பத்த நிலையில் 23 லட்சம் பேர் வரை தேர்வில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வுகள் முகமை செய்திருந்த நிலையில் பெரிய அளவில் தமிழகத்தில் முறைகேடுகள் இல்லாமல் நடைபெற்றது. அதே நேரத்தில் பல மாநிலங்கள் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
மாணவர்கள் சாதனை: இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. அதாவது மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என எண்டிஏ கூறியிருந்தது.
முறைகேடு புகார்: இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதாவது, ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரியங்கா காந்தி: இதனையடுத்து எதிர்க் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தொடர்பான முறையான மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில்,”முதலில் நீட் தேர்வுத் தாள் கசிந்த நிலையில், தற்போது அதன் முடிவுகளிலும் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரே மையத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு, பலவிதமான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது.
பதிலளிக்க வேண்டும்: மறுபுறம், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன்? நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தொடர்பான முறையான கேள்விகளுக்கு மாணவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இந்த முறையான புகார்களை விசாரித்து தீர்வு காண்பது அரசின் பொறுப்பு அல்லவா?” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications