மீண்டும் ரபேல் டீல்.. "இதெல்லாம் ரொம்ப தப்பா இருக்கே!" சந்தேகம் எழுப்பும் காங்கிரஸ்.. பரபரப்பு
டெல்லி: பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா மீண்டும் ரபேல் விமானங்களை வாங்க உள்ள நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் உள்ளிட்ட பலரை அவர் இந்த பயணத்தில் சந்திக்க உள்ளார்.
மேலும், அங்குள்ள இந்தியர்கள் மத்தியிலும் பிரதமர் மோடி உரையாட உள்ளார். இது மட்டுமின்றி பிரதமர் மோடியின் இந்த பயணத்தில் பாதுகாப்புத் துறை தொடர்பாக சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.

இதற்கிடையே இந்தியக் கடற்படைக்காக பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 5.5 பில்லியன் யூரோக்கள் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த இந்திய மதிப்பில் ரூ. 50 ஆயிரம் கோடியாகும்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான டிஏசி- Defence Acquisition Council இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. டிஏசி எனப்படும் இந்த குழு தான் பாதுகாப்புத் துறைக்கு வாங்கப்படும் ஆயுதங்கள் குறித்து இறுதி முடிவை எடுக்கும் குழுவாகும்.
ரஃபேல்-எம் என்பது ரபேல் போர் விமானத்தின் கடற்படை வேரியண்ட் ஆகும். இது தற்போது இந்திய விமானப்படையிடம் ஏற்கனவே இருக்கும் நிலையில், கடற் படைக்கும் ரஃபேல்-எம் ஜெட்டை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி சில கேள்விகளை எழுப்பியுள்ளது. விமானப்படைக்காகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பிரான்சிடம் இருந்து இந்தியா 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்கியது. இதன் கடைசி பேட்ஜ் 2022 டிசம்பரில் இந்தியாவுக்கு வந்தது. கடந்த 23 ஆண்டுகளில் பாதுகாப்புப் படைக்கு வாங்கப்பட்ட மேஜர் போர் விமானங்கள் இதுவாகும்.
இந்தச் சூழலில் தான் இப்போது கடற்படைக்காக 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை இந்தியா வாங்க உள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "பிரான்ஸ் செய்தி நிறுவனமான மீடியாபார்ட் கடந்த ஜூலை 11ஆம் தேதி ரபேல் ஒப்பந்தம் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது. 2016 ரஃபேல் ஒப்பந்தத்தில் 'ஊழல்', குறித்து விசாரிக்கும் பாரிஸ் நீதித்துறை ஆணையம் விசாரணையில் உதவிக்காக இந்திய அதிகாரிகளிடம் கேட்டுள்ளது" என்றார்.
மேலும், பிரான்ஸ் நாட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வரி குறைக்கப்பட்டதற்கும் 2016 ரபேல் ஒப்பந்தத்திற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "மோடி அரசு இனியும் மவுனமாக இருக்க முடியாது. உண்மை முழுமையாக வெளியே வரும் போது இங்கே என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார்.












Click it and Unblock the Notifications