வந்தது அடுத்த லிஸ்ட்.. ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!
டெல்லி: 2 மாநில சட்டசபை தேர்தல் சூடுபிடித்து வருகிறது. ஜார்கண்ட் சட்டபை தேர்தலுக்கு இரண்டு வேட்பாளர்கள் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கு நான்கு வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (அக்டோபர் 28) அறிவித்துள்ளது.. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொகாரோ தொகுதியில் ஸ்வேதா சிங்குக்கும், தன்பாத்தில் அஜய் துபேவுக்கும் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கியுள்ளது.
ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஜார்க்கண்ட் அரசின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, ஜார்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஜார்க்கண்ட் தேர்தலுக்கான 21 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது. 7 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை கடந்த சனிக்கிழமை அன்று வெளியிட்டது. இந்நிலையில், இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொகாரோ தொகுதியில் ஸ்வேதா சிங், தன்பாத் தொகுதியில் அஜய் துபே ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) தொடங்கியது. வரும் அக்டோபர் 29 வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டனர். அதன்படி, காங்கிரஸ், சிவசேனா (யுபிடி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய 3 கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 23 தொகுதிகள் அந்தந்தக் கட்சி வேட்பாளர் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தமது முதல் வேட்பாளர் பட்டியலில் 48 பேரின் பெயர்களை வெளியிட்டிருந்தது. தற்போது இரண்டாவது பட்டியலில் 23 பேரை அறிவித்திருந்தது. 3வது பட்டியலில் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி இதுவரை 87 வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இந்நிலையில், மேலும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அகோலா மேற்கு தொகுதியில் சஜித் கான் மன்னன் கான், கொலாபா தொகுதியில் ஹீரா தேவசி, சோலாபூர் சிட்டி மத்திய தொகுதியில் சேத்தன் நரோடே ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். கோல்ஹாப்பூர் வடக்கு தொகுதியில் ராஷேஷ் பாரத் லட்கருக்கு பதிலாக மதுரிமாராஜே மலோஜிராஜே சத்ரபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications