தடுப்பூசி பற்றி பிரதமர் மோடி டிவியில் பேசியது தப்பான தகவல்.. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி: இந்தியாவில் ஒரு கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார் . ஆனால் இதில் சில உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லபா இன்று அளித்துள்ள பேட்டியில், நரேந்திர மோடி பேசியதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதோ அவரது பேட்டியிலிருந்து..

ராஜிவ் காந்தி காலம்
மோடி தனது உரையில் இந்தியா தற்போது தான் ஒரு தடுப்பூசியை தயாரித்து இருக்கிறது என்று பேசினார். ஆனால் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஆறு வகை நோய்களுக்கு எதிராக நாடு முழுக்க தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தினார். 1985-ஆம் ஆண்டு இந்த தடுப்பூசி நடவடிக்கைகள் நாடு முழுக்க நடைபெற்றன. தொழுநோய் முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. ஆனால் அவர் எந்த ஒரு விளம்பரமும் செய்து கொள்ளவில்லை.

சீனாவை பாருங்க
குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு ஈடாக மக்கள் தொகை கொண்ட சீனாவில் 216 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 80% அளவுக்கான மக்களுக்கு இரண்டு வகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நமது நாட்டில் அந்த எண்ணிக்கை குறைவு என்பதோடு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.

மன்னிப்பு கேட்க வேண்டும்
கடந்த ஏப்ரல்-மே காலகட்டத்தில் இந்தியாவில் இரண்டாவது அலை பரவியபோது மத்திய அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பலர் உயிரிழந்தனர் அவர்களின் குடும்பத்தினரிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் அரசு நிர்வாகத் திறமை இல்லாமல் இருந்ததுதான் அந்த உயிரிழப்புகளுக்கு காரணம். இவ்வாறு கௌரவ் வல்லபா தெரிவித்தார்.

இரு டோஸ் அவசியம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையின் போது இந்திய அரசின் செயல்பாடு பற்றி சந்தேகம் தெரிவித்தவர்களுக்கு 100கோடி தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக தக்க பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை 100 கோடி கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியது. ஆனால் இன்னமும் 30 சதவீத மக்கள் கூட இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட வரை எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடிய அமெரிக்காவில் கூட நோய் பரவல் காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டவர்கள் எண்ணிக்கை 75 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் போது தான் இந்தப் பெருந்தொற்று முடிவுக்கு வரும் என்கிறார்கள் சுகாதாரத் துறை வல்லுனர்கள்.












Click it and Unblock the Notifications