பணக்காரர்களின் ஆக்கிரமிப்பு என்னாச்சு? முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் - ப.சிதம்பரம்
டெல்லி: ஜஹாங்கீர்புரியில் புல்டோசர்களை கொண்டு வீடுகள் இடிக்கப்பட்டது முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட நவீன தாக்குதல் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தியின்போது மசூதி அருகே இந்துத்துவ அமைப்பினர் தகராறில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே கலவரம் வெடித்தது.
இதனை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இஸ்லாமியர்களின் வீடுகள் ஆக்கிரமிப்புகள் என்று சொல்லி உச்சநீதிமன்ற தடையும் மீறி புல்டோசர்களை கொண்டு இடிக்கப்பட்டன.

தாமதமாக சென்ற காங்கிரஸ்
இந்த கட்டிடம் இடிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அரசியல் கட்சிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரத்தில் தாமதமாகவே பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் கேள்வி
அவரிடம், "ஏற்கனவே காங்கிரஸ் ஒரு மென்மையான இந்துத்துவ கட்சி என்று விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் அதரவை பெறும் செயல் என்ற பாஜகவின் விமர்சனத்துக்கு அஞ்சி காங்கிரஸ் தாமதமாக சென்றதா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "யாரெல்லாம் இங்கு வந்தார்கள்? எப்போது வந்தார்கள்? என்பது குறித்து எனக்கு தெரியாது.

மதசார்பின்மை மீறப்பட்டால் போராட வேண்டும்
கட்டிட இடிப்பு சம்பவத்தை ஏன் ஒரு மதத்துடன் தொடர்புபடுத்துகின்றீர்கள்? மதசார்பின்மை என்பதே நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. காங்கிரஸ் கட்சியின் அடிப்படையான மதிப்பீடுகளில் அதுவும் ஒன்று. அனைவரும் மதசார்பின்மை குறித்து பேச வேண்டும். அது மீறப்படும்போது போராட வேண்டும்.

புல்டோசர் அரசியல்
டெல்லி ஜஹாங்கீர்புரி மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் கரேகான் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் புல்டோசர்களை கொண்டு தடாலடியாக அகற்றப்படுவதன் மூலம் அரசியல் அகராதியில் புதிதாக "புல்டோசர் அரசியல்" என்ற குறிச்சொல் உருவாகி இருக்கிறது. இதை பாஜக தலைவர்கள் நியாயப்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு என்று உள்ளாட்சி அமைப்பு சட்டங்களில் தனியாக விதி உள்ளது.

இஸ்லாமியர்களின் வீடுகள்
ஆனால், டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் எல்லா விதியும் மீறப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இடிக்கப்பட்ட வீடுகள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மற்றும் ஏழைகளுடையது என தெரிய வந்திருக்கிறது. நான் சொல்வது தவறு என்றால் தகர்க்கப்பட்ட வீடுகள் யாவும் யாருக்கு சொந்தமானது என்பதை அரசு வெளியிட வேண்டும்.
Recommended Video

நவீன தாக்குதல் முறை
பணக்காரர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதிகளில் கூட ஏராளமான வீடுகள் சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டு இருக்கின்றன. அங்கெல்லாம் புல்டோசர்கள் சென்றனவா? முஸ்லிம்கள் மற்றும் ஏழைகளை குறிவைத்து அவர்களின் வீடுகள், கடைகளை புல்டோசர்களை கொண்டு இடித்ததை நவீன தாக்குதல் முறை என்று குறிப்பிடுவது சரியானதாக இருக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications