பல நகரங்களில் பாதிப்பு.. இந்தியாவை மிரட்டும் கொரோனா.. அரசு அலர்ட்.. மருந்து ஏற்றுமதிக்கு தடை
டெல்லி: சீனாவில் பல ஆயிரம் உயிர்களை கொன்று குவித்த கொலைகார கொரோனா வைரஸ், இந்தியாவில், ஆரம்பத்தில் பரவாமல் தடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக, டெல்லி, பெங்களூர் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மார்ச் 2ம் தேதியான நேற்று, இரண்டு புதிய கொரோனா வைரஸ் (COVID-19) நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். டெல்லி, ஹைதராபாத், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு நோயாளிகள் சந்தேகத்தின்பேரில் தனிமை வார்டுகளில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறார்கள்.
ஜெய்ப்பூரின் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடனான அந்த நபருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எஸ்.எம்.எஸ் மருத்துவ கல்லூரி ஆய்வகத்திற்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சோதனை
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் பேசிய ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா, "பிப்ரவரி 29ம் தேதி இத்தாலியில் இருந்து ஜெய்ப்பூருக்கு, ஒரு பயணி வந்தார். ஸ்கிரீனிங்கில் கோவிட் -19 அறிகுறிகள் தெரிந்தது. எனவே அவர், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்." என்றார்.

ஆக்ரா
ஆக்ராவில் 6 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் டெல்லியைச் சேர்ந்த கொரோனா பாதித்த நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
அவர்கள் தனிமை வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ரத்த மாதிரிகள் புனேயிலுள்ள, தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன.
|
மோடி ஆலோசனை
COVID-19 நாவல் கொரோனா வைரஸை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில், விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவுக்கு வருபவர்களை சோதிப்பது முதல் உடனடி மருத்துவ சிகிச்சை அளிப்பது வரை வெவ்வேறு அமைச்சகங்களும், மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்று மோடி கூறியுள்ளார். அரசு இதுதொடர்பாக ஹெல்ப்லைன் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியா ஹெல்ப்லைன் எண்: + 91-11-23978046 கொரோனா வைரஸ் இந்தியா ஹெல்ப்லைன் மின்னஞ்சல்: [email protected]

ஏற்றுமதிக்கு தடை
இந்தியாவில், காய்ச்சல் மருந்துகள் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மத்திய அரசு இன்று சுமார் 26 மருந்து பொருட்கள் (ஏபிஐ) மற்றும் ஆன்டி பயோட்டிக், வைட்டமின்கள் மற்றும் ஹார்மோன்கள் உள்ளிட்ட மருந்துகள் ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிக்கையின்படி, ஏபிஐக்கள் மற்றும் பாராசிட்டமால், டினிடாசோல், மெட்ரோனிடாக்சோல், வைட்டமின்கள் பி 1, பி 6, பி 12, ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோன், குரோமாபெனிகால், ஆர்னிடசோல் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்
நொய்டாவில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் அடுத்த சில நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் கொரோனா வைரஸால், இப்பள்ளியின் மாணவரின் தந்தை பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவர் ஹைதராபாத்துக்கு பஸ்சில் பயணித்துள்ளார். எனவே சக பயணிகளை அதிகாரிகள் சோதித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications