உஷார்.. இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா.. ஒரே நாளில் இரு மடங்கானது
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வீரியமாக பரவத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2183ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 214 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,965ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியது. இரண்டாம் அலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என மத்திய மாநில அரசுகளின் கடும் முயற்சியினால் தற்போது கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மூன்றாம் அலை பெரிய அளவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு
கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. இருப்பினும் நான்காவது அலை வருகிற ஜூன் மாதம் தொடங்கும் என கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இருமடங்கான கொரோனா தொற்று
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2183ஆக உயர்ந்துள்ளது.

11,542 பேர் சிகிச்சை
கடந்த 24 மணி நேரத்தில் 1,985 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 10,773 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 11,542 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 214 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,965 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் டெல்லியிலும் கேரளாவிலும் அதிகரித்து வருகிறது. எனவே மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட வாய்ப்புள்ளது.

தடுப்பூசி
நாடு முழுவதும் தடுப்பூசியானது இதுவரை 186.54 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications