இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புதிதாக நேற்று மேற்கு வங்கம் ஹரியானாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் தெரிய வந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
சீனாவின் வுகானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இதுவரை 8000 பேர் இறந்துள்ளனர்.
சுமார் 197000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் மற்ற நாடுகள் இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றன.

பலரும் மரணம்
கொரோனா வைரஸால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உயிரிழப்புகள் தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதேபோல் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன் மடங்கு அதிகரித்து வருகிறது.

மே.வங்கம், ஹரியானா
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. புதிதாக நேற்று புதுச்சேரியின் மாஹி, மேற்கு வங்கம் ஹரியானாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு வந்த 18 வயது இளைஞருக்கு கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதேபோல் புதுச்சேரி மாஹியில் 69 வயது பெண் ஒருவருக்கும், ஹரியாவில் 29 வயது பெண் ஒருவருக்கும் ( மலேசியாவில் இருந்து திரும்பியவர்) கொரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது. இதனிடையே இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136ல் இருந்து 148 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் சாவு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கர்நாடகா மாநிலம் கலாபுராகியில் 76 வயது முதியவர் ஒருவரும், டெல்லியைச் சேர்ந்த 68வயது பெண் ஒருவரும், மும்பையைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூன்று பேருக்கும் ஏற்கனவே உடல் ரீதியாக பிரச்னைகள் இருந்துள்ளது. அத்துடன் கொரோனாவும் தாக்கியதால் உயிரிழந்துள்ளார்கள்.

கேரளா 26 பேர்
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 வெளிநாட்டினர் உள்பட 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கேரளாவில் இரண்டு வெளிநாட்டினர் உள்பட 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹரியானாவில் 15 பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 15 பேருக்கும், கர்நாடகாவில் 11 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி 8 பேருக்கும், உத்தரகாண்ட், லடாக், தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், மேற்கு வங்கம், புதுச்சேரி (மாஹி) ஹரியானாவில் தலா ஒருவருக்கும் கொரோனா பரவி உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்த ஒரு நோயாளியும் குணமாக்கப்பட்டதால் புதிததாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications