இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 519 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 519 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116 ஆகவும் உயர்ந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் குணமடைந்து வருவதாகவும் மாநில அரசுகள் கடந்த சில நாட்களாக அறிவித்து வருகின்றன. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16116 ஆக உள்ளது.
இதில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 2302. கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 519. மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 211 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் 3651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 365 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லியில் 1893 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. மொத்தம் 43 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 1407 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு 70 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 15 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைவது அதிகரித்து வருகிறது.
குஜராத்தில் கொரோனாவின் தாக்கம் 1,000-த்தை தாண்டியுள்ளது. இங்கு மொத்தம் 1604பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆகும். உத்தரப்பிரதேசத்தில் 1084 பேரும் ஆந்திராவில் 603 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தெலுங்கானாவில் 844 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.