கொரோனாவால் இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பா? .. நிர்மலா சீதாராமன் ஆலோசனை.. விரைவில் முக்கிய முடிவு
கொரோனா வைரஸ் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து விரைவில் அறிவிப்போம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: கொரோனா வைரஸால் பெரிய அளவில் விலைவாசி உயரவில்லை. இந்த வைரஸ் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து விரைவில் அறிவிப்போம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 1886 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 72436 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். இது உலகம் முழுக்க 22 நாடுகளில் பரவி உள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கிய மூன்று பேரும் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொடுமையான கொரோனா வைரஸ் சீனாவை மொத்தமாக முடக்கி உள்ளது.இந்த வைரஸ் என்பது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்கு பரவும்.
என்ன ஆலோசனை
இந்த நிலையில் இந்த வைரஸ் காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்பு, ஏற்றுமதி இறக்குமதி பாதிப்பு தொடர்பாக இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை செய்தார். பல்வேறு மருந்து நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், பொருளாதார வல்லுனர்களுடன் இவர் ஆலோசனை செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பார்மா நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கிறது.
இந்தியா தேவை
அதேபோல் இந்தியாவிற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். கொரோனா வைரஸால் பெரிய அளவில் விலைவாசி உயரவில்லை. இப்போதே விலைவாசி உயர்வு குறித்து யோசிக்க வேண்டியது இல்லை. நிலைமை அந்த அளவிற்கு மோசம் அடையவில்லை. சீனாவில் பரவி வரும் வைரஸ் காரணமாக இந்தியாவில் இன்னும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
விரைவில்
இவ்வளவு சீக்கிரம் இதை பற்றி சிந்திக்க வேண்டியது கிடையாது. இந்த வைரஸ் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து விரைவில் அறிவிப்போம். இது தொடர்பாக ஆலோசனை செய்ய இருக்கிறோம். நாளை பல்வேறு துறை நிபுணர்கள், செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்ய இருக்கிறோம். இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு எதுவும் இல்லை.
மருந்து நிறுவனம்
இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் அதை ஏற்றுமதி செய்யும் எண்ணத்தில் இருக்கிறது. அந்த அளவிற்கு மருந்து உற்பத்தி இந்தியாவில் அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச இருக்கிறேன். அதன்பின் முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவோம். இப்போது முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை, என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.