கார்த்தி சிதம்பரத்துக்கு ஷாக்.. சொத்துகளை ED முடக்கிய விவகாரத்தில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அதிரடி
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் மனுவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மொரீஷியஸ் நாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதி பெற்றது. இந்த அனுமதி, விதிகளை மீறி வழங்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

இதற்கு அப்போதைய மத்திய நிதி அமைச்சர், அவரது மகன் கார்த்தி உதவியதாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தபோது கார்த்தி சிதம்பரம் சார்பாக வழக்கறிஞர்கள் அர்ஷ்தீப் குரானா, அக்ஷத் குப்தா மற்றும் சிதக் சிங் ஆனந்த் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் 365 நாட்களுக்குள் அமலாக்கத் துறை தனது புகாரை தாக்கல் செய்யத் தவறியதால் பறிமுதல் தானாகவே காலாவதியாகிவிட்டது என்று வாதிட்டனர்.
அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் ஜோஹெப் ஹொசைன், விவேக் குர்னானி மற்றும் கனிஷ்க் மௌரியா ஆகியோர், ஊரடங்கு உத்தரவு நீதிமன்றங்களின் நடமாட்டத்தையும் செயல்பாட்டையும் கடுமையாகக் கட்டுப்படுத்தியதாகவும், அதன் காரணமாக அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு அந்த விதியில் விலக்கு அளிக்கப்படும் என்றும் வாதிட்டனர்.
இதனை விசாரித்த தீர்ப்பாயம், கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளின் தற்காலிக பறிமுதல் தொடரும் என்றும், இதில் டெல்லியில் உள்ள ஜோர் பாக் சொத்தில் அவருக்கு உள்ள ரூபாய் 16.05 கோடி மதிப்புள்ள 50% பங்கு மற்றும் சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பல வங்கிக் கணக்குகள் அடங்கும் என்றும் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications