கொரோனா வந்தால் ஜூரம், மூச்சு பிரச்சினை, இருமல் மட்டும் அறிகுறி அல்ல.. இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு!
டெல்லி: கொரோனா வைரஸ் என்பது வெறும் நுரையீரல் தொடர்பானது என நினைக்க வேண்டாம். இது மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் கொடூர குணம் கொண்டது என மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரல் கடந்த ஆண்டு இறுதியில் பரவியது. அந்த வைரஸானது நிமோனியா போன்று செயல்பட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்த கொரோனா வைரஸ், கோவிட் 19 என அழைக்கப்பட்டு வருகிறது. கொரோனா உறுதியானவர்கள் பெரும்பாலானோருக்கு பெரிய அளவிலான அறிகுறிகள் ஏதும் இல்லை.

அறிகுறிகள்
சிலருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் உள்ளன. கொரோனா பாதித்தவர்களில் குறைந்த சதவீதத்தினருக்கு மூச்சுவிடுவதில் சிரமம், அதனால் மரணம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது 3 வகைப்படும், அறிகுறியில்லாதது, லேசான அறிகுறி, தீவிர அறிகுறி என்பதாகும்.

நிபுணர்கள்
இதற்கு 4ஆவது வகையும் உண்டு. அது லேசானது முதல் தீவிர அறிகுறிக்கு இடையில் இருப்பதாகும். ஆகஸ்ட் முதல் இந்தியா உலகளவில் கொரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டாக மாறி வருகிறது. இதனால் இந்திய மருத்துவர்களும் சுகாதாரத் துறை நிபுணர்களும் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலைவலி
அதன்படி கொரோனா வைரஸ் என்பது வெறும் நுரையீரல் தொடர்பான நோயோ குறைபாடோ அல்ல என்று எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர்களால் விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவர் பத்மா ஸ்ரீவத்சவா கூறுகையில் 35 வயது நபர் அறிகுறி அல்லாதவராகவோ அல்லது லேசான அறிகுறி இருப்பவராகவோ இருந்தால் அவருக்கு தலை வலி மற்றும் வாந்தி ஏற்படும்.

நோயாளிகள்
எனினும் அவருக்கு ரத்தம் உறைதல் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சில நோயாளிகளுக்கு கொரோனா மூளையை பாதிக்கும் என்பதால் அவர்களுக்கு ரத்தம் உறைந்து ஸ்ட்ரோக் ஏற்படும். நுரையீரலில் பிரச்சினையை கொடுக்கும், மாரடைப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

மூக்கு
கொரோனா வைரஸை நுரையீரல், மூக்கு, தொண்டை ஆகியவற்றுடன் சுருக்கிவிட முடியாது. காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருந்தால் அது கொரோனாவாக இருக்கலாம் என அரசு கூறுகிறது. இதுதான் நீங்கள் யாருக்கு போன் செய்தாலும் அதில் காலர் ட்யூனாக வரும். ஆனால் உண்மையில் கொரோனா வயிறு, குடல், மூளை, சிறுநீரகம், கல்லீரல், இதயம், கணையம், ரத்த நாளங்கள், கண்கள், தோல் ஆகியவற்றையும் பாதிக்கும்.

வறட்டு இருமல்
காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சு பிரச்சினை மட்டுமல்லாது வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி ஆகியவை தற்போது கொரோனா அறிகுறிகளை வரையறுக்கப்பட்டுள்ளன. தீராத தலைவலி, மயக்கம், மூளையில் வீக்கம், ரத்தம் கட்டுதல் ஆகியவையும் கொரோனாவுடன் தொடர்புடையதுதான். சிறுநீரகங்களில் கோவிட் 19 பாதித்தால் சிறுநீரகத்தின் புரத அளவில் மாற்றம் ஏற்படும்.

கல்லீரலை தாக்கும்
சிறுநீருடன் ரத்தம் வெளியேறும். கல்லீரல் செல்களை தாக்கும். கொரோனா இதய தசைகளையும் தாக்குகிறது. இதனால் இதய துடிப்பு குறைகிறது. உடனே மாரடைப்பு ஏற்படுகிறது. கணையத்தில் அழற்சி ஏற்பட்டு சர்க்கரை அளவு அதிகமாவதால்தான் நீரிழிவு நோயுடன் கொரோனா பாதித்த நோயாளிகளை குணப்படுத்துவது சவாலாக உள்ளது. குழந்தைகளுக்கு கால்களில் புண்கள், ரத்த நாளங்களில் கட்டு உள்ளிட்டவையும் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications