கர்நாடகாவில் 40 நாளில் 23 பேர் மாரடைப்பால் பலி.. கொரோனா தடுப்பூசி தான் காரணமா? மறுத்த மத்திய அரசு
டெல்லி: கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் மட்டும் 40 நாட்களில் 23 பேர் திடீர் மாரடைப்பால் பலியாகி உள்ளனர். இந்த மாரடைப்புக்கு கொரேனாா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று முதல்வர் சித்தராமையா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இந்நிலையில் தான் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 பேர் திடீர் மாரடைப்பால் இறந்துள்ளனர். கடந்த 40 நாட்களை எடுத்து கொண்டால் ஹாசன் மாவட்டத்தில் மாரடைப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.

இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் இறந்தவர்கள் அனைவரும் இளம் மற்றும் நடுத்தர வயதை சேர்ந்தவர்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்கும் 10 பேர் பலியாகி உள்ளனர். அதில் 20 வயது நிரம்பிய 2 இளைஞர்கள், 2 இளம்பெண்களும் அடங்குவார். மேலும் 41 வயது முதல் 59 வயதுக்குள் 7 பேரும், 60 வயதுக்கு மேல் ஒருவரும் பலியாகி உள்ளனர்.
இது கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கர்நாடகா முதல்வர் சித்தரமையா பத்திரிகையாளர்களிடம் கூறும்போது,‛‛கொரோனா தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த இறப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால் அதிகரித்து வரும் மாரடைப்புகளுக்கு கொரேனாா தடுப்பூசி ஒரு காரணமாக இருக்கலாம் என்று உலகளாவிய ஆய்வுகள் சுட்டிக்காட்டி உள்ளன'' என்று கூறினார்.
மேலும் ஜெயதேவா மருத்துவமனையில் இதயவியல் பிரிவின் இயக்குநரும், டாக்டருமான ரவீந்திரநாத் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் விசாரணை நடத்தி இறந்தவர்களுக்கான காரணம் குறித்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளன. இதற்கான உத்தரவை முதல்வர் சித்தராமையா பிறப்பித்தார். இதனால் கர்நாடகாவில் மாரடைப்பால் இறந்தவர்களின் பின்னணியில் கொரோனா தடுப்பூசி தான் காரணமாக இருக்குமோ? என்ற கேள்வி எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக ‛‛ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் ஆய்வுகளில் மாரடைப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஜெனிட்டிக்ஸ், வாழும்முறை, உடலில் இருக்கும் குறைபாடு, கொரோனாவில் இருந்து மீண்டாலும் இருக்கும் உடல் உபாதை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications