7 கார்கள் புடைசூழ.. ராணுவம் உடன் வர.. கடும் பாதுகாப்புடன்.. காஷ்மீர் சென்ற சீதாராம் யெச்சூரி!
ஜம்மு காஷ்மீரில் உள்ள உறவினர்களை, கட்சி உறுப்பினர்களை சந்திக்க சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று ஸ்ரீநகர் செல்கிறார்.
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் உள்ள தனது நண்பர் யோசோப் தரிகாமியை சந்திக்க சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று ஸ்ரீநகர் சென்றார். கடும் பாதுகாப்புடன் அவர் யோசோப் தரிகாமி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரை இரண்டாக பிரித்துக் நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீரில் தற்போது முன்னாள் முதல்வர்கள் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 3 வாரமாக வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு இன்னும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் காஷ்மீருக்குள் இந்தியாவின் பிற பகுதியில் இருந்து அரசியல் தலைவர்கள் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
கடந்த வாரம் காஷ்மீர் நிலைமையை பார்வையிட எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். ஆனால் அவர்கள் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் காஷ்மீரில் உள்ள உறவினர்களை மற்றும் கட்சி உறுப்பினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வழக்கு தொடுத்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது. அதில்,சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு காஷ்மீர் செல்ல அனுமதி அளிக்கிறோம் .
காஷ்மீரில் உள்ள குடும்பத்தினரை, கட்சி உறுப்பினரை அவர் சந்திக்க தடையில்லை. ஆனால் காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை செய்ய கூடாது, என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள தனது நண்பர் யோசோப் தரிகாமியை சந்திக்க சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று ஸ்ரீநகர் சென்றார். கடும் பாதுகாப்புடன் அவர் யோசோப் தரிகாமி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இன்று டெல்லியில் இருந்து அவர் விமானம் மூலம் காஷ்மீர் சென்றார். அங்கிருந்து கார் மூலம் அவரை ராணுவத்தினர் சிபிஎம் உறுப்பினர் யோசோப் தரிகாமி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். முன் பக்கம் 4 கார்கள், பின்பக்கம் 3 கார்கள் என்று 7 கார்கள் பாதுகாப்புடன் சீதாராம் யெச்சூரி அழைத்து செல்லப்பட்டார்.
யோசோப் தரிகாமி உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில மாதங்களாக கஷ்டப்பட்டு வருகிறார். இவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று காஷ்மீர் சென்று இருக்கும் சீதாராம் யெச்சூரி வேறு எந்த அரசியல் தலைவர்களையும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் காஷ்மீர் செல்லும் முதல் அரசியல்வாதி என்பதால் சீதாராம் யெச்சூரி பயணம் இன்று அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது.