விவசாயிகளுக்கு ஆதரவாக.. கிரிக்கெட் வீரர் சந்தீப் ஷர்மா ஆவேசம்.. திடீரென ட்வீட் டெலிட்.. என்னாச்சு?
டெல்லி: விவசாயிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட டுவிட்டர் பதிவை திடீரென டெலிட் செய்துள்ளார் கிரிக்கெட் வீரர் சந்தீப் ஷர்மா. அவருக்கு 'மேலே இருந்து வந்த அழுத்தங்கள் தான்' இந்த முடிவுக்கு காரணம் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் கவனம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. பாடகி ரிஹானா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சகோதரி மகள் மீனா ஹாரிஸ் ஆகியோரும் இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றி பேச ஆரம்பித்தனர்.
இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று கூறியிருந்தார்.
சச்சின் டெண்டுல்கர்
இதனால்தான், நேற்றிரவு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், இந்திய இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. இந்திய பிரச்சினையை இந்தியர்கள் பார்த்துக்கொள்வார்கள். வெளியே உள்ள சக்திகள் வெறும் பார்வையாளர்களாக இருந்தால் மட்டும் போதும். பங்கேற்பாளராக இருக்கக் கூடாது என்று அதிரடியாக ஒரு கருத்தை தெரிவித்தார்.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா
அவ்வளவு தான் தாமதம். வரிசையாக, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நடிகர், நடிகைகளும் இதே போன்ற கருத்துகளை வெளியிட்டனர். அதேநேரம் கிரிக்கெட் வீரர் சந்தீப் ஷர்மா மற்றும் இதிலிருந்து மாறுபட்ட கருத்துடன் ஒரு ட்விட்டர் பதிவை இன்று மதியம் 12.40 மணி அளவில் வெளியிட்டு இருந்தார். அதில், இந்த லாஜிக் படி பார்த்தால் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து கொள்ளக் கூட முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அது அவர்களின் உள் பிரச்சனைதான். ஆனால் மற்றவர்கள் உதவி செய்கிறோம் இல்லையா என்று தெரிவித்து இருந்தார்.
ஜெர்மனி
சந்தீப் சர்மா தனது ட்விட்டர் பதிவில் புகைப்பட வடிவில் தனது எழுத்துக்களை பதிவு செய்திருந்தார். அதில் அவர் கூறுகையில், புகழ் பெற்ற பாடகி ரிஹானா கூறியதற்காக பலரும்.. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் கூட இந்த விஷயத்தில் தலையிட கூடாது என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த லாஜிக் படி பார்த்தால் ஜெர்மனியை தவிர்த்த வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவரும் யூதர்கள் மீது நாசி படைகள் ஒடுக்குமுறை செய்தது பற்றி பேச முடியாது.
பாகிஸ்தானை எப்படி கேட்பது
இந்த லாஜிக் படி பார்த்தால் பாகிஸ்தான் தவிர்த்து வேறு நாட்டைச் சேர்ந்த யாரும், அகமதி முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் கொடுங்கோன்மை பற்றி பேச முடியாது. இவ்வாறு பல்வேறு உதாரணங்கள் காட்டி அவர் புகைப்பட வடிவில் ட்வீட் செய்திருந்தார்.
ஆனால் இந்த ட்வீட் வெளியாகி சில மணி நேரங்களுக்குள் திடீரென அதை டெலிட் செய்துள்ளார் சந்தீப் ஷர்மா.
|
பஞ்சாப் வீரர்
அதே நேரம் இதை நெட்டிசன்கள் பலரும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இப்போது பகிர்ந்து வருகிறார்கள். ஜனநாயகப்படி ஒருவர் கருத்து சொல்ல உரிமை கிடையாதா என்று சிலரும், பிசிசிஐ யில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்து விட்டதா, எனவேதான் நீக்கிவிட்டார்களா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். பஞ்சாப் அணிக்காக, ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடியவர் சந்தீப். பஞ்சாப் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுபவர். பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில்தான், அவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அவர் தனது ட்விட்டர் பதிவில் டெலிட் செய்துவிட்டார்.