தலைவர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்- செயற்குழுவில் சோனியா; மூத்த தலைவர்கள் மீது ராகுல் கோபம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் மீதும் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் சோனியாவின் தலைமைக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பினர்.
இது அந்த கட்சியில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. 23 தலைவர்களின் கடிதத்துக்கு எதிராக, இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தலைவராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் முதல்வர்கள், எம்பிக்கள், மாநில கமிட்டி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் தற்போது காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூடியுள்ளது. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
Recommended Video
இக்கூட்டத்தில் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்று சோனியா காந்தி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தமக்கு பதில் புதியதாக ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் சோனியா காந்திதான் இடைக்கால தலைவராக நீடிக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதிய விவகாரமும் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராகுல் கடும் அதிருப்தி
இக்கூட்டத்தில், காங்கிரஸ் மேலிடத்துக்கு 23 தலைவர்கள் கடிதம் எழுதியது தொடர்பாக தமது அதிருப்தியை ராகுல் காந்தி வெளிப்படுத்தினார். அதுவும் சோனியா காந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இப்படி ஒரு கடிதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எழுத வேண்டிய அவசியம் என்ன? பாஜகவுக்கு உதவும் வகையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications