'அதி தீவிர புயல்' மோக்கா கரையைக் கடக்கும் போது.. உலக வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன் தினம் காலை புயலாக வலுவடைந்தது.. மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது நேற்று முன் தினம் மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது.
மத்திய வங்கக்கடலில் இருந்து படிப்படியாக அதிதீவிர புயலாக மாறி வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து மே 14-ம் தேதி தென்கிழக்கு வங்க தேசம் - வடக்கு மியான்மர் இடையே பிற்பகலில் மோக்கா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதி தீவிர புயலாக மாறியுள்ள மோக்கோ கரையைக் கடக்கும் போது மணிக்கு 180-190 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே புயல் கரையைக் கடக்கும் போது கனமழை பெய்யும் என்பதால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள உலக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், புயல் கரையக் கடக்கும் போதும் கரையக் கடந்த பிறகும் கடுமையான தாக்கங்கள் இருக்கும். மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் மியான்மரில் உள்ள கியாக்பியு இடையே ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் ரோஹிங்கிய முஸ்லீம்கள் அகதிகள் முகாம் உள்ளது. இதனால், இப்பகுதியில் புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் கடுமையான மனிதாபிமான தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதி தீவிர புயல் அச்சுறுத்தலால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடா கடல் மற்றும் அந்தமானின் வடக்கு கடல் பகுதிகளுக்கு கப்பல்கள் மற்றும் இழுவைப்படகுகள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதியில் இருப்பவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications