கவுரி லங்கேஷ் உள்ளிட்ட முற்போக்காளர்கள் கொலையில் ஒரே 'நூல் இணைப்பு?' உச்சநீதிமன்றம் சந்தேகம்
Recommended Video
டெல்லி: கல்புர்கி உள்ளிட்ட முற்போக்கு சிந்தனையாளர்கள் கொலையில், பொதுவான நூல் இணைப்பு உள்ளதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த நரேந்திர தாபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே, கர்நாடகாவை சேர்ந்த கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அடுத்தடுத்த கால இடைவெளிகளில் கொலை செய்யப்பட்டனர். நாடு முழுக்க இந்த கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
கல்புர்கி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கல்புர்கி மனைவி உமாதேவி சார்பில், கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலைகளில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மகாராஷ்டிரா மாநில அரசு வழக்கறிஞர் நிஷாந்த்திடம், நீதிபதி லலித், தாபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு விசாரணை நிலை குறித்து கேட்டார். தாபோல்கர் கொலை வழக்கு சிபிஐயாலும், பன்சாரே கொலை வழக்கு மகாராஷ்டிரா காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழுவாலும் விசாரிக்கப்படுகிறது. இரு வழக்குகளையும் மும்பை உயர் நீதிமன்றம் மேற்பார்வை செய்கிறது.
கவுரி லங்கேஷ் மற்றும் கல்புர்கி கொலை வழக்குகளை கர்நாடக காவல்துறை விசாரிக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி லலித், இந்த கொலைகள் நடுவே பொதுவான நூல் இணைப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பியதோடு, ஒரே விசாரணை அமைப்பு இவற்றை விசாரிப்பது பொருத்தமாக இருக்கும். ஒரே நூல் அனைத்தையும் இணைத்தால் ஒரே விசாரணை அமைப்பு விசாரிப்பதே சரியானது என்று கூறினார்.
இதன்மூலம், முற்போக்காளர்களை கொலை செய்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்க, சுப்ரீம் கோர்ட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கு விசாரணை, ஜனவரி மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.