ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவுக்கு சட்டப்பேரவை தேர்தல் எப்போது? இன்று அறிவிப்பு இல்லை என தகவல்!
டெல்லி: சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் இன்று மதியம் வெளியாகும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகாது என்று சொல்லப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே, இந்த தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது.

அதே நேரம் ஹரியானாவின் தற்போதைய பாஜக அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலத்தின் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இத்துடன் மகாராஷ்டிராவிலும் பாஜக ஆட்சி வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. ஜார்க்கண்ட் மாநில அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும்.
ஆனால் இப்போதைக்கு மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஞ்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா, ஜார்க்கண்ட் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகாது என்று கூறியுள்ளார். அதாவது, "இன்றைய செய்தியாளர் சந்திப்பில், ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாது. ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் பின்னர் நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.
இவர் பாஜக சார்பில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது இம்மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இங்கு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக கூட்டணி 9 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
முன்னதாக அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது, ஆட்சியை கைப்பற்ற பாஜக முயன்றது போன்ற சம்பவங்களால் மாநில அரசியல் சலசலப்பாக இருக்கிறது. எனவே சட்டப்பேரவை தேர்தல் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மறுபுறம் மகாராஷ்டிராவை பொறுத்த, அளவில் மகாவிகாஷ் அகாடி எனும், உத்தவ் தாக்ரே அணி+தேசியவாத காங்கிரஸ்+காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளின் கட்சிகளின் கூட்டணி வலுவாக இருக்கிறது. இங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றாலும், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் மகாவிகாஷ் கூட்டணியே கெத்து காட்டியிருந்தது. எனவே, இந்த முறையும் பாஜகவுக்கு, இக்கூட்டணி கடும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இருப்பினும் இன்றைய தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இம்மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications