மணிப்பூர் விவகாரம்.. 8-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் 8ஆம் நாள் அமர்வு இன்று கூடிய நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவையும் முடங்கியது. இதனால் நாடாளுமன்றம் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.
நமது நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் ஆகிய நேரங்களில் கூடும். ஏற்கனவே நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கியது.
சரியாக இந்த மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு தான் மணிப்பூர் குறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையாகியிருந்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கியே வருகின்றனர். சில மசோதாக்கள் மட்டும் எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமல் தாக்கலானது.

அதேநேரம் "இந்தியா" எம்பிக்கள் இணைந்து மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இதன் மீது எப்போது விவாதம் நடைபெறும் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எப்போது விவாதம் நடத்துவது என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
மறுபுறம் "இந்தியா" எம்பிக்கள் மணிப்பூர் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்துவிட்டுத் திரும்பியுள்ளனர். எனவே, அவர்கள் இது குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள் எனத் தெரிகிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இடையில் சர்ச்சைக்குரிய டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் மசோதாவையும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்று நாடாளுமன்றம் தொடங்கியது முதலே எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டு வந்தனர். இதனால் அவை நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட போதிலும், அமளி தொடர்ந்தே வந்தது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications