இந்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு மட்டும் 5.94 லட்சம் கோடி.. சீனா ஒதுக்கிய தொகை எவ்வளவு தெரியுமா?
டெல்லி: சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் தொகையை நடப்பு நிதி ஆண்டில் அதிகரித்து உள்ளது. அதாவது 5.94 லட்சம் கோடி ரூபாய் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகமாகும்.
2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, உள்கட்டமைப்பு - முதலீட்டை அதிகரிப்பது, பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி உள்பட 7 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்கள்தொகை குறைஞ்சிட்டே வருதாம்.. இப்படி முடிவை எடுத்த சீனா! கட்டுப்பாடுகளை தளர்த்தும் அதிகாரிகள்
தனிநபர் வருமான வரி
அதேபோல், பட்ஜெட்டில் நடுத்தர மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருந்த வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு, வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், புதிய வரி விதிப்பு முறையில் வருமான வரிச் சலுகை வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது போக பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றன.
புதிய தளவாடங்கள், விமானங்கள்,
குறிப்பாக நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாததாக இருக்கும் பாதுகாப்புத்துறைக்கு கடந்த ஆண்டை விட 13 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 5 லட்சத்து 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் ராணுவத்துக்கு ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மொத்த தொகையில், ராணுவத்துக்கான மூலதன செலவீனங்களுக்காக ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தளவாடங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்டவை வாங்க இந்த தொகை பயன்படுத்தப்படும்.
சம்பளம், பரமாரிப்பு செலவுகள்
வருவாய் செலவீனம் என்று சொல்லப்படும் சம்பள செலவுகள், பரமாரிப்பு செலவுகள் உள்ளிட்டவற்றிற்கு ரூ. 2 லட்சத்து 70 ஆயிரத்து 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மூலதன ஒதுக்கீடாக ரூ. 8 ஆயிரத்து 774- கோடியும் பாதுகாப்புத்துறை ஓய்வு பெற்ற வீரர்களின் ஓய்வூதியம் மற்றும் பிற இதர செலவீனங்களுக்காக ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 205 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட 13 சதவீதம்
கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்தை நவீனமயமாக்கும் பணிகள் வேகமாக நடநிபெற்று வருகிறது. நவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு ஊக்கப்படுத்துதல் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தப்படும் நிலையில், கடந்த ஆண்டை விட 13 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக எல்லையில் சீனாவுடனான அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ஆயுத பலத்தை அதிகரிக்கவும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக லடாக் உள்ளிட்ட சீனாவுடனான எல்லையில் சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் அதிகரிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சீனாவுடன் ஒப்பிடுகையில்..
இந்தியா தனது ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டு இருந்தாலும் சீனாவுடன் ஒப்பிடும் போது இது குறைந்த அளவே ஆகும். 2022 ஆம் ஆண்டுக்கான சீனா பட்ஜெட்டில் ராணுவத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை 230 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் பார்த்தால் ரூ.17.57 லட்சம் கோடி ஒதுக்கியிருந்தது. இந்தியா தனது ராணுவத்திற்கு ஒதுக்கிய தொகையை விட சீனா ஒதுக்கிய தொகை சுமார் 3 மடங்கு அதிகமானதாகும.