இதுதான் விதியா? நொடியில் வாலிபர் உயிரை பறித்த ஏசி! 2வது மாடியில் இருந்து தலையில் விழுந்தது எப்படி?
டெல்லி: டெல்லியில் வீட்டு முன்பு ஸ்கூட்டரில் நின்று பேசி கொண்டிருந்த இளைஞரின் தலையில் 2வது மாடியில் இருந்து பறந்து வந்த ஏசி விழுந்தது. இதில் நிலைக்குலைந்துபோன இளைஞர் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
டெல்லி டோரிவாலன் பகுதியை சேர்ந்தவர் ஜிதேஷ் (வயது 18). இவரது நண்பர் பெயர் பிரான்சு (17). இவர் டெல்லி படேல் நகரை சேர்ந்தவர். இந்நிலையில் தான் நேற்று காலையில் ஜிதேசும், பிரான்சும் அங்குள்ள வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தனர்.
ஜிதேஷ் ஸ்கூட்டரில் அமர்ந்து படி பிரான்சிடம் பேசி கொண்டிருந்தார். சில நிமிடங்கள் வரை அவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அதன்பிறகு ஜிதேஷ் நேரம் ஆகிவிட்டது எனக்கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

இதையடுத்து பிரான்சு, ஜிதேசை கட்டியணைத்து வழியனுப்ப முயன்றார். ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த ஜிதேசை, பிரான்சு கட்டியணைத்தார். அதன்பிறகு பிரான்சு அவரை விட்டு விலகிய அடுத்தநொடி மேலிருந்த ஏசிக்கான அவுட்டோர் யூனிட் பொத்தென மின்னல் வேகத்தில் கீழே விழுந்தது.
அந்த ஏசி அவுட்டோர் யூனிட் நேரடியாக ஸ்கூட்டரின் மீது அமர்ந்திருந்த ஜிதேசின் தலையில் விழுந்தது. இதில் ஜிதேஷ் நிலைக்குலைந்துபோனார். ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த அவர் தவறி கீழே விழுந்தார். அதேபோல் அருகே நின்ற பிரான்சும் காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 2 பேரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜிதேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதேவேளையில் காயமடைந்த பிரான்சுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தேஷ்பாண்டு குப்தா போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் 2வது மாடியில் இருந்து ஏசி அவுட்டோர் யூனிட் மின்னல் வேகத்தில் கீழ்நோக்கி ஜிதேஷின் தலையில் விழுவது அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications